பியகம தொகுதியில் மாத்திரம் 800 போலி டாக்டர்கள் - மருத்துவ அதிகாரி குமாரி
(ஐ.ஏ. காதிர் கான்)
இலங்கையில், கம்பஹா மாவட்ட பியகம தேர்தல் தொகுதியிலேயே ஆகக் கூடுதலான தகுதியற்ற போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இத் தொகுதியில் மாத்திரம், சுமார் 700 முதல் 800 வரையிலான போலி டாக்டர்கள் சேவையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாகவும், பியகம சுகாதார மருத்துவ அதிகாரி குமாரி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
டெங்கு அதிகமாகத் தொற்றியுள்ள பிரதேசமாக பியகம அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான போலி டாக்டர்களின் செயற்பாடுகளினால், நோய்கள் தீவிரமடைந்து, இப்பிரதேசத்திலுள்ள இரண்டரை இலட்சம் மக்களின் உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டிலுள்ள ஆயுள்வேத வைத்தியர்கள், எந்தவித ஆங்கில மருத்துவ அறிவும் இல்லாமல், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதினால், நோயாளிகள் தங்களது நோய்களைக் குணப்படுத்த முடியாமல் சங்கடத்திற்குள்ளாகி வருவதாக, மினுவாங்கொடையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும், கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர் எம்.எச்.எம். முனாஸிக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஆயுள்வேத வைத்தியர்கள், ஆங்கில மருந்து கொடுப்பதற்குத் தகுதி அற்றவர்கள் என்பதை, மக்கள் அறியாமல் இருப்பதனால்தான், இத்தகைய நிலைமை ஏற்படுவதாகவும் டாக்டர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, ஒவ்வொரு கிராம மக்களும் இவ்வாறானவர்களை இணங்கான முன்வர வேண்டும் என்றும், இதனை, கிராம சேவகர் ஊடாக பிரதேச சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், டாக்டர் எம்.எச்.எம். முனாஸிக் பொது மக்களை வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
Post a Comment