யாழ்ப்பாணத்தில் 3 மரண தண்டனை பெற்றவரின் இறுதிநேர வாக்குமூலம்
என் குடும்பத்தில் ஏற்பட்டது சாதாரண பிரச்சினை. சாதாரணமாக தீர்த்து இருக்கலாம். அதை தீர்க்க தவறியதில், இன்று என் வாழ்க்கை, என் மனைவி, பிள்ளையின் வாழ்க்கை எல்லாம் வீணாகிவிட்டது என என அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளியாக மன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட பென்னம்பலம் தனஞ்சயன் தெரிவித்தார்.
குறித்த வழக்கின் தீர்ப்பினை நேற்றைய தினம் மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார். அதன் போது எதிரியிடம் ஏதேனும் சொல்ல விரும்புகின்றீரா ? என வினாவிய போதே எதிரி அவ்வாறு தெரிவித்திருந்தார்.
எனது மனைவிக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்டது சாதாரண குடும்பப் பிரச்சினை. அதனை தீர்க்க விரும்பி இருந்தால் சாதரணமாக தீர்த்திருக்கலாம். அதனை யாரும் செய்யாததால் தான் பாரிய குற்றம் நிகழ்ந்தது.
இதனால் என் வாழ்க்கையும் என் மனைவி பிள்ளையின் வாழ்கையும் பாதிப்படைந்துள்ளது. இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என மன்றில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து எதிரியின் மனைவியிடம் ஏதேனும் மன்றில் தெரிவிக்க விரும்புகின்றீரா ? என நீதிபதி வினாவிய போது மூன்று கொலைகளை செய்துள்ளார். அவருக்கு நீங்கள் தான் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
அதனையடுத்து நீதிபதி தெரிவிக்கையில் , இந்த வழக்கில் அதிக இழப்புக்களை எதிரியின் மனைவியான இந்த பெண்ணே இழந்துள்ளார்.
எதிரி கூண்டில் நிற்பவர் இந்த நிமிடம் வரை இந்த பெண்ணுக்கு சட்டரீதியான கணவன். அவரால் தனது தாய், அக்கா , மற்றும் தம்பியை இழந்துள்ளார். இன்று தீர்ப்பினால் தனது கணவனையும் இழக்கின்றார் என தெரிவித்தார்.
அத்துடன் யாழ். குடாநாட்டையே பதட்டத்திற்கு உள்ளாக்கிய படுகொலை தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு இரண்டரை வருட கால பகுதிக்குள் தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் இவ்வாறு பாரிய தண்டனை வழங்கி இன்றைய தினமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
குறித்த வழக்கில் முக்கொலைகளை புரிந்த குற்றசாட்டுக்கு மூன்று மரண தண்டனைகளும் , இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்திற்கு 14 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் , 2 லட்ச நஷ்ட ஈடு விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment