வக்பு சபையின் கீழ், மத்ரஸாக்களை பதிய நடவடிக்கை - அமைச்சர் ஹலீம்
நாட்டிலுள்ள அரபு மத்ரஸாக்கள் அனைத்தையும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
அரபு மத்ரஸாக்களின் வக்பு செய்யப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது அவற்றைச் சட்டரீதியாகத் தீர்ப்பதற்கு இவ்வாறான பதிவுகள் அவசியம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். அரபு மத்ரஸாக்களுக்கு வக்பு செய்யப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் ஹலீம் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அரபு மத்ரஸாக்களினால் பரிபாலிக்கப்படும் சொத்துகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த முறைப்பாடுகளை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வக்பு சபை பதிவுகள் இன்மையினால் நீண்ட காலம் செலவிடவேண்டியுள்ளது.
வக்பு சபையின் தலைவரும் இது தொடர்பாக கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்டால் சொத்துக்களைக் கண்காணிக்கும் வாய்ப்பு சட்டரீதியாக சபைக்குக் கிடைக்கும். எனவே அரபு மத்ரஸாக்கள் அனைத்தையும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்வது தொடர்பாக அதன் தலைவருடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நூருல் அமீனைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது தற்போது நாட்டில் 280 அரபு மத்ரஸாக்கள் இயங்கிவருகின்றன. இந்த மத்ரஸாக்கள் அனைத்தும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அவற்றுக்குப் பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த மத்ரஸாக்கள் வக்பு சபையின் கீழ் பதிவு செய்யப்படவில்லை.
அவ்வாறு பதிவு செய்வதானால் வக்பு சட்டத்தில் இவ்விதிமுறை உள்வாங்கப்பட வேண்டும்.
என்றார். வக்பு சபைத் தலைவர் சட்டத்தரணி எஸ். எம். எம். யாசீனைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவிய போது சபையின் கீழ் அரபு மத்ரஸாக்கள் பதிவு செய்யப்பட்டால் அவற்றின் சொத்துக்களை சபை கண்காணித்து, முறையீனங்கள், ஊழல்கள் ஏற்படாது தவிர்க்க முடியும் என்றார்.

Post a Comment