Header Ads



கண்ணீர்விட்ட சந்திரிக்கா, மைத்திரியை தேட உத்தரவு, மகிந்தவுக்கு பிரதமர் பதவி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பதவி காலத்தில் பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்ட போது, அந்த பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன கூறியதாக அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று -21- நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் அதனை நினைவு கூர்ந்துள்ளார்.

பீ. திஸாநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரது பிரத்தியேக செயலாளராக பணிப்புரிந்தார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக நியமக்க தீர்மானித்திருந்தார். மங்கள சமரவீர இதனை ஆதரித்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்கள், சந்திரிக்காவின் முடிவை எதிர்த்தனர்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாடாளுமன்றத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இருந்த போது, ரில்வின் சில்வா, விமல் வீரவங்ச, அனுர பண்டாரநாயக்க, கதிர்காமர், மங்கள சமரவீர ஆகியோர் அலுவலகத்தில் கூடி கலந்துரையாடுவார்கள்.

2004 ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் மூன்று அமைச்சுக்களை அரசாங்கத்திடம் இருந்து பறிக்க முன்னாள் ஜனாதிபதியை இணங்க வைத்தனர். மறுநாள் ஏப்ரல் 4 ஆம் திகதி நான் அலுவலகத்திற்கு வரும் போது, அனைத்து தொலைபேசிகளும் அலறுகின்றன. தொலைநகல் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

அப்போது அங்கிருந்த பேர்டி பிரேமலால் திஸாநாயக்க சிங்களத்தில் உரையாற்ற கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனக் கூறினார்.

அப்போது மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்ட போது, விமல் வீரவங்ச, சபையில் கூற முடியாத ஆபாச வார்த்தைகளால் அவரை விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த நான் அது பற்றி எனக்கு தெரியாது, ஆனால் அதுதான் நடக்கப் போகிறது என கூறினேன்.

அப்போது தொலைநகல் செய்தி ஒன்று ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிங்களத்தில் உரையாற்ற கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டுமாயின், அனுர பண்டாரநாயக்க அல்லது மைத்திரிபால சிறிசேன ஆகியோரில் ஒருவரை நியமிக்க வேண்டும் என அதில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

தொலைநகலை பார்த்த ஜனாதிபதி சந்திரிக்கா, அனுர பண்டாரநாயக்கவுக்கு எந்த வகையிலும் பிரதமர் பதவியை கொடுக்க முடியாது, நான் ஜனாதிபதி, அனுர பிரதமர், எந்த வகையில் இதற்கு இணங்க முடியாது என்றார். இப்படியானவர்களதான் பண்டாரநாயக்கவினர்.

உடனடியாக மைத்திரியை அழைத்து வாருங்கள். அவர் எங்கு இருக்கின்றார் எனக் தேடுங்கள் என சந்திரிக்கா கூறினார். அப்போது பொலன்நறுவை மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு நான் உலங்குவானூர்தியை அனுப்புகிறேன். உடனடியாக மைத்திரியை கொழும்புக்கு அனுப்புங்கள் என்று கூறினார்.

இரண்டு மணி நேரத்திற்கு பின்னர், மைத்திரி வந்தார். சார் இன்று நல்லது நடக்க போகிறது. அதனை கைவிட வேண்டாம் என நான் அவரிடம் கூறினேன்.

ஜனாதிபதி சந்திரிக்காவிடம் சென்றதும் ஜனாதிபதி நியமனக்கடித்தை பார்த்த மைத்திரி, மேடம், இதனை செய்ய வேண்டாம் பிரதமர் பதவியை மகிந்தவுக்கு கொடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

எனது சிறந்த நண்பர் லக்ஷ்மன் கதிர்காமரை நான் இழந்து விடுவேன் என சந்திரிக்கா கண்ணீர் மல்க கூறினார். அப்போது அனுர பண்டாரநாயக்கவும் அங்கு வந்தார். சிறுப்பிள்ளை போல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த பிரச்சினை நான் தீர்க்கின்றேன் எனக் கூறி அனுர பண்டாரநாயக்க, லக்ஷ்மன் கதிர்காமரை சந்திக்க சென்றார்.

கதிர்காமரை அனுர சமாதானப்படுத்தினார். இதனையடுத்து பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதில் இருந்து கதிர்காமர் ஒதுங்கிக்கொண்டார். இதனையடுத்து மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுகிறது. அவர் பிரதமர் பதவியில் அமர்ந்தார். இப்படி மைத்திரிபால சிறிசேன , மகிந்த ராஜபக்சவுக்கு உதவினார்.

அது மாத்திரமல்ல எல்லோரும் மகிந்தவுக்கு ஆதரவு வழங்குவோம். மீண்டும் நாட்டை ரணிலிடம் வழங்க முடியாது என மைத்திரி கூறினார்.

இந்த விடயங்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் நானும் விரைவில் புத்தகம் ஒன்றை எழுத உள்ளேன் என பீ. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.