முஸ்லிம்கள் எத்தனை பேர், சொந்த இடங்களுக்கு திரும்புவரென இனங்காண வேண்டும் - ரணில்
வடக்கில் மக்களை துரிதமாக மீள்குடியமர்த்துவதற்காகவே அமைச்சர்களான சுவாமிநாதன், ரிஷாத் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரமதரிடம் கேள்வி நேரத்தில் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்குமுகமாகவே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய அரசாங்கம் தனது பொறுப்புக்களை முன்னெடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் பிரகாரம் தான் வடமாகாணத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்களான சுவாமிநாதன், ரிஷாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர் தலைமையிலான செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் மக்கள் தமது சொந்த பிரதேசங்களுக்கு திரும்பியிருக்கின்ற போதும் அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அதனை துரிதப்படுத்தும் முகமாகவே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணி மீள்கட்டமைப்பு மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்தறிந்து நடவடிக்கைகளை துரிதப்படுத்துவற்காக உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும்.
இதற்காக இச்செயலணிக்கு பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரின் ஒத்துழைப்புடனேயே இந்த செயலணி தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். மாகாண சபையைப் பொறுத்தவரையில் மீள்குடியேற்றம் தொடர்பாக பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. அத்துடன் மேலும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.
மாகாண சபையின் செயற்பாடுகளில் தலையீடு செய்யவோ அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தவோ நாம் விரும்பவில்லை.
மாகாண சபையின் முன்மொழிவுகளையும் உள்வாங்கி பரிசீலனை மேற்கொள்வதற்கு மீள்குடியேற்றச் செயலணி தயாராகவே உள்ளது.
மீள்குடியேற்றத்தில் விசேடமாக பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முரண்பாடுகளின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
புத்தளத்தில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களில் எத்தனைபேர் புத்தளத்தில் வசிக்க விரும்புகின்றார்கள், எத்தனைபேர் மீளவும் சொந்த இடங்களுக்கு திரும்ப விரும்புவார்கள் என்பதை இனங்காண வேண்டியுள்ளது.
இவ்வாறு பல விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன என்றார்.
பிரதமரின் சரியான முடிவு இதை துரிதப்படுத்தி சரியான் முறையில் செயல் படுத்து வாராயின்
ReplyDeleteபல்லின மக்களும் நிம்மதியாக வாழ முடியும்,