உயர் நீதிமன்றத் தீர்ப்பினால், மண் கவ்விய அரசாங்கம்..!
பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக அரசியலமைப்பின் அடிப்படையில் உரிய செயன்முறைகள் பின்பற்றப்படவில்லை.
ஆகவே அச் சட்டமூலம் செல்லுபடியாகாது என பாராளுமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளது.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தொடர்பாக பரிசீலித்து உயர்நீதிமன்றத்தினால் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பிலேயே மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகருக்கான அறிவிப்பு நேரத்தில் பாராளுமன்றத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய,
'பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் என்ற பெயரிலான சட்டமூலம் அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்பிரையின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின் 152 ஆவது உறுப்புரையிலும் 133 ஆவது நிலையியற் கட்டளையிலும் உள்வாங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளானது தன்மையில் கட்டாயம் என்றும் அவற்றை பின்பற்ற தவறுவதானது அதன் பின்னரான நடைமுறைகளை செல்லுபடியற்றதாக்கும் என்று நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பின் 78 (2) மற்றும் 152 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக உரிய செயன்முறைகள் உள்வாங்கப்படவில்லை என்பதால், அரசியலமைப்பின் 120 மற்றும் 121 ஆம் உறுப்புரைகளை 123 மற்றும் 152 ஆம் உறுப்புரைகளுடன் சேர்த்து வாசிக்கப்படுவதன் பிரகாரம் மனுதாரர்களினால் கேள்விக்குட்படுத்தப்பட்ட அடிப்படையில் இந்த நிலையில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படக்கூடாது என்று உயர்நீதிமன்றம் முடிவு செய்கிறது' என்றார்.
Post a Comment