தந்தையையும், மகனையும் துரத்திய யானை - தந்தையை கொன்றது
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட காஞ்சலம் குடாக் கிராமத்தில் உள்ள பிள்ளையாரடிச் சந்தியில் காட்டு யானை தாக்கிய விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
புலிபாய்ந்தகல் பாடசாலை வீதியைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான சிவராசா மகேஸ்வரன் (வயது 58) என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவரது மகனும் இவருமாகச் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வயலுக்கு நேற்று (18) மாலை சென்று கொண்டிருந்தனர். இதன்போது பிள்ளையாரடிச் சந்தியில் நின்ற யானை ஒன்று இவர்களைத் துரத்தியுள்ளது.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே போட்டு விட்டு தந்தையும் மகனும் வெவ்வேறு திசைகளில் தப்பியோட முற்பட்டுள்ளனர்.
இதில், தந்தையை குறித்த யானை துரத்தி தாக்கிவிட்டுச் சென்றுள்ளது. காயமடைந்த தந்தையை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக இவரது மகன் கொண்டுசென்ற போது அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment