Header Ads



"மது விற்கும் அமைச்சர்கள், சுட்டிக்காட்டினால் எனக்கு அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியாது"


அரசாங்கத்தின் சட்டரீதியான அனுமதி பெற்று மது விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண மாவட்டமும் இரண்டாம் இடத்தை நுவரெலியா மாவட்டமும் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்றுள்ளன. இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் மதுவற்ற நாடு எனும் வேலைத்திட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சித்திட்டம் இன்று) ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில் 

மது விற்பனையில் பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுடைய விபரங்களை எனக்கு முன்பதாக பேசிய பலர் சுட்டிக்காட்டினார்கள்.  ஆனால் எனக்கு அவர்களை சுட்டிக்காட்ட முடியாது. அப்படி செய்தால் எனக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது. அது அந்த அளவிற்கு சக்திவாய்ந்த ஒரு விடயமாகும். ஆனால் ஏதோ ஒரு வகையில் இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

மாவட்டங்களில் மாதம் தோறும் நடைபெறுகின்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும்,பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் மது ஒழிப்பு தொடர்பாக கட்டாயமாக நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கு எமது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமைதாங்க வேண்டும். தனி ஒருவரால் மட்டும் இதனை சாதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும்.

நான் பல சர்வதேச மகாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற பொழுது எமது நாட்டில் 18 வீதமான போஷாக்கின்மை இருப்பதை எனது வாயால் பேசும் பொழுது  வெட்கித்தலைகுனிந்திருக்கின்றேன். இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காக அதிக போசாக்கு குறைந்த மாவட்டமாக திகழும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து அந்த செயல்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது உழைப்பில் அதிகமான பகுதியை மதுபானத்திற்காக செலவு செய்கின்றார்கள். இதன் காரணமாக அவர்களுடைய சமூக பொருளாதார சீரழிவுகள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்லாமல் பெண்களும் இந்த விடயத்தில் ஈடுபடுவதால் இந்த பாதிப்புகள் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம். எனவே அதற்கான முறையான ஒரு வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் அனைத்து அலுவலகங்களிலும் போதை ஒழிப்பு தொடர்பாக விசேட பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்த செயல்திட்டம் தொடர்பாக செயற்பட வேண்டும். இதற்கான விசேட சுற்றறிக்கைகளை நாம் கடந்த வருடத்தில் எல்லா திணைக்களங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய அலுவலகங்களில் மதுபானத்தை பாவிப்பவர்களை அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

இங்கு வருகை தந்திருக்கின்ற அனைவரும் மது ஒழிப்பை அமுல்படுத்துவதாக காலையில் தங்களுடைய வலது கரத்தை நீட்டி சத்தியபிரமாணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். எனவே நீங்கள் அனைவரும் இன்று பகல் உணவின்போதோ அல்லது மாலை வேளையின்போதோ அல்லது குளிர் அதிகமாக இருக்கின்றது என்ற காரணத்தை காட்டியோ அந்த சத்திய பிரமாணத்தை மீறமாட்டீர்கள் என நான் நினைக்கின்றேன்.

மதுவற்ற ஒரு சமூகமாக நாம் மாற்றம் பெற்றால் பல மாற்றங்களை எமது நாட்டில் ஏற்படுத்த முடியும். நாட்டிற்கு சிறந்த தலைவர்களாக குடும்பத்தின் நல்ல தலைவனாக பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக சமூகத்திற்கு ஒரு வழிகாட்டியாக முன்னோக்கி செல்ல முடியும் என்றார்.  

1 comment:

Powered by Blogger.