சிங்ஹலே என்றால் என்ன..?
-சிங்களத்தில்:திஸரனீ குணசேகர
தமிழாக்கம் : எம்.இஸற்.எம்.நயீம்-
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான முயற்சி இந்த நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குடியரசுக் கட்சி வேட்பாளர்களிடையே முன்னணியில் பெருஞ்செல்வந்தரான டொனால்ட் ட்ரம்ப் திகழ்கின்றார். ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் வலதுசாரி இனவாதப் போக்கினைப் பிரதிபலிப்பவர்.
அவரது பார்வையில் ‘உண்மையான அமெரிக்கர்கள்’ என்பவர்கள் வெள்ளைத் தோலை உடைய கிறிஸ்தவர்கள் மாத்திரமே ஏனைய அனைத்து அமெரிக்கர்களும் வெளியார்கள் மாத்திரமன்றி உள்நாட்டு எதிரிகளாவர்.
முஸ்லிம்கள் அகதிகளாகவோ உல்லாசப் பிரயாணிகளாகவோ அமெரிக்காவினுள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என ட்ரம்ப் கடந்த டிசம்பர் மாதம் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டார்.
இவரது இந்த இனவாதக் கருத்துக் காரணமாக இஸ்லாமியத் தீவிரவாதப் போக்குடைய ஐ.எஸ். போன்ற அமைப்புக்களுக்கு நன்மையே அன்றி எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று அரசியல் விமர்சகர்கள் மீண்டும் மீண்டும் அபாய எச்சரிக்கை விடுத்தபோதும் ட்ரம்ப் அதனைச் சிறிதும் செவிமடுப்பதாகத் தெரியவில்லை.
இவர் இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்து ஒரு வாரகாலம் கழிந்ததுதான் தாமதம் அல்கய்தா அமைப்போடு தொடர்புடைய சோமாலியாவின் தீவிரவாதக் குழுவான அஷ்சபாப் அமைப்பு தமது அமைப்புக்கு அங்கத்தவர்களைத் திரட்டும் விளம்பர வீடியோ காட்சியில் ட்ரம்பின் கருத்தினையும் உள்வாங்கினர்.
டரம்பின் இந்தக் கருத்து காரணமாக முஸ்லிம்களுக்கெதிரான தீவிரவாதிகளினால் சமாதானத்தை விரும்பும் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்றபோதிலும் தீவிரவாத முஸ்லிம் அமைப்புக்களுக்கு நன்மையையே ஏற்படுத்தும். ஒன்றுக்கொன்று எதிரான தீவிரவாதிகள் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றையொன்று பலம் பெறச் செய்கிறார்கள் என்பதை வரலாறு நெடுகிலும் நிரூபித்துள்ளது. இலங்கையரான எமக்கும் இது புதியதோர் அனுபவம் அல்ல. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் கறுப்பு ஜூலையாகும்.
கறுப்பு ஜூலைக்கான உடனடிக் காரணமாக அமைந்தது இலங்கை இராணுவ வீரர்கள் 13 பேரின் படுகொலைக்குக் காரணமாக அமைந்த போ போ பிராவோ (Four Four Bravo) தாக்குதலாகும். எல்.டி.டிஈ.இத்தாக்குதலை மேற்கொள்ளும்போது அது பாரிய பொருளாதார ஆளணி நெருக்கடிக்கு உட்பட்டிருந்தது. எனினும் புலிகள் அமைப்பின் இந்த எல்லாப் பிரச்சினைகளும் கறுப்பு ஜூலையுடன் முடிவுக்கு வந்தது.
இதன் பயனாக புலிகளின் அமைப்புக்குத் தேவையான ஆளணியைவிட அதிகமான தொகையினரைச் சேர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. போதிய நிதி வசதிகளையும் ஆயுதங்களையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. நீதியை விரும்பும் சாதாரண தமிழ் மக்களுக்குச் சாபமாக அமைந்த கறுப்பு ஜூலை புலிகள் அமைப்புக்கு ஆசீர்வாதமாக அமைந்தது.
தற்போது தலை தூக்கிக்கொண்டிருக்கும் “சிங்ஹலே” அமைப்பு வளர்ச்சி பெறுமாயின் அதுவும் இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே உள்ள தீவிரவாத சிறு தொகையினருக்கு மிகவும் சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும்.
‘சிங்ஹலே’ பரம்பரைக் கதைகள்
சிங்ஹலே நம்பிக்கைகளுக்கும் கோசத்துக்கும் அடிப்படையாக அமைவது சிங்கள இனத்தின் தோற்றம் பற்றி மகாவம்சத்தில் கூறப்படும் கருத்தாகும். மகாவம்சக் கதைக்கேற்ப இந்தியாவின் வங்க நாட்டு சுப்பாதேவி எனும் அரசிளங்குமரியின் கதையே இதன் மூலாரம்பமாகும். சுப்பாதேவி எப்போதோ ஒரு நாளில் காட்டு மிருகங்களின் அரசனோடு (சிங்கத்தோடு) சகவாசம் கொள்வாள் எனக் குறிகாரர்கள் கூறியிருந்தனர்.
இந்த இளவரசி மிகவும் அழகானவள் என்றும் பார்ப்போரை வசீகரிக்கக்கூடிய கவர்ச்சி மிக்க தோற்றமுடையவள் என்றும் அவள் அரச மாளிகையில் இருந்து தப்பிச் சென்று மகத நாட்டுக்கு செல்லும் ஒரு கூட்டத்தாருடன் இணைந்து செல்லும்போது லாலா நாட்டின் சிங்கமொன்று இந்தக் கூட்டத்தவர்களில் பலரைக்கொன்று தின்றதோடு சுப்பாதேவி அந்தச் சிங்கத்தின் குகைக்குச் சென்று வாழ்ந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது.
சிறிது காலத்தின் பின் இந்த சிங்க மனித சோடிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும் ஆண்குழந்தையின் கைகள் இரண்டும் கால்களிரண்டும் சிங்கத்தின் கைகால்களைப் போன்றிருந்ததாகவும் அதனால் அக்குழந்தை சிங்கபாகு (சிங்கத்தின் கை) என அழைக்கப்பட்டதாகவும் மகாவம்சம் கூறுகிறது.
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான தொடர்பினைச் சுற்றி உருவாகிய இத்தகைய கதைகள் உலகில் அபூர்வமானவையல்ல.
எனினும் அவை வெறுமனே கற்பனைக் கதைகளோ தேவதைக் கதைகளோ அன்றி உண்மைச் சம்பவங்களல்ல. மனித இனப் பெண் ஒருவருக்கும் சிங்கமொன்றுக்கும் கணவன் மனைவியாக உறவு கொள்ள முடியாது.
மட்டுமல்ல அவ்வாறான உறவின் மூலம் குழந்தைகள் உருவாகவும் முடியாது என்பது அணுவளவேனும் மூளையுள்ள ஒருவரால் கூட உணர்ந்து கொள்ள முடியும்.
ஏதாவது ஒரு மனிதன் சிங்கத்தின் கைகால்களோடு பிறந்திருந்தால் இன்றைய காலகட்டத்தை விட கடந்த காலங்களிலேயே அத்தகைய பிறவியை விகாரமான ஒன்றாகக் கருதி முழு சமுதாயமுமே கட்டாயமாக புறக்கணித்தே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சுப்பா தேவியினதும் சிங்கத்தினதும் கதை தேவதைக் கதைகளுக்கும் கிரேக்க பேய்க்கதைகளுக்கும் அராபிய புராணக் கதைகளுக்கும் ஒப்பான கட்டுக்கதைகளே அன்றி வரலாறாக அமையாது. விஞ்ஞான வளர்ச்சியோ உலகைப் பற்றி தெளிவோ அற்ற முன்னேற்றமடையாத பண்டைய காலத்தில் சிங்கபாகு கதை போன்ற மூட நம்பிக்கைகள் வரலாற்று ஏடுகளில் உள்ளடக்கப்படல் மிகவும் இலகுவாக நிகழ்பவை. வரலாறு என்ற கலையின் தந்தை அதாவது உலகின் முதலாவது வரலாற்று ஆசிரியராகக் கருதப்படும் ஹெரோடோடஸின் (Herodotos) Histories எனும் வரலாறுகள் என்ற நூலில் இத்தகைய புராண புனைகதைகளைக் காணலாம்.
அவரது அன்றைய காலகட்டத்தில் நிலவிய நம்பிக்கைகளைப் பற்றி அறிந்துகொள்வதே அல்லாமல் இவற்றைத் தற்காலத்தில் வரலாறாகக் கருதுவதில்லை. மகாவம்சக் கதைகளும் இத்தகைய நம்பிக்கைகள் பற்றியதே. எமது நாட்டிலும் இவை பிரபல்யமாக விளங்கின என்பதையே காட்டுகின்றன.
‘சிங்ஹலே’ என்பதும் வெறுமனே புராண கட்டுக்கதையே அன்றி வரலாறு அல்ல. மகாவம்ச கதையின் எஞ்சிய பகுதிகளை அவதானிக்கும் போது அறிவுள்ள எவருக்கும் தெளிவாக விளங்கக் கூடியதாகும். மகாவம்சக் கதையின் படி சிங்கபாகு தனது தந்தையைப் படுகொலை செய்த கொலைகாரனாவான். அவன் தனது 16 ஆவது வயதில் தனது தாயையும் சகோதரியையும் அழைத்துக் கொண்டு குகையிலிருந்து வெளியேறினான்.
சிங்கம் தனது குடும்பத்தைத் தேடிச்சென்ற போது சிங்கபாகு தனது தந்தையைக் கொலை செய்தான். அதன் பின்னர் சிங்கபாகு சிங்கபுரம் என்ற தலை நகரை அமைத்து அதன் அரசனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டதோடு தனது சகோதரியையும் திருமணம் செய்துகொண்டான். சிங்கபாகு இன்று உயிரோடு இருந்தால் தனது தந்தையைக் கொலை செய்த குற்றத்துக்கு மரண தண்டனைக்கும் தனது சகோதரியைத் திருமணம் செய்துகொண்டமைக்காக சிறைத் தண்டனைக்கும் ஆளாகவேண்டியிருக்கும்.
சிங்கபாகு சிங்கசீவலி தம்பதியினரின் மூத்த புதல்வனான விஜயனைப் பற்றி மகாவம்சம் குறிப்பிடும் தகவலின்படி அவன் ஒரு துட்டனாகவே அறியப்படுகின்றான். விஜயனும் அவனது தோழர்களும் எவ்வளவு துஷ்டர்களாக இருந்தார்கள் என்பதை மகாவம்சம் குறிப்பிடும்போது விஜயனதும் அவனது தோழர்களதும் கொடுமைகளைப் பொறுக்க முடியாத பொது மக்கள் அரசனிடம் சென்று மாளிகையைச் சுற்றி வளைத்து விஜயனைக் கொலை செய்துவிடுமாறு வேண்டி நின்றதாகவும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
அரசன் சிங்கபாகு தனது புதல்வன் விஜயனையும் அவனது துட்ட தோழர்கள் 700 பேரையும் தலை முடியை மழித்து படகுகளில் ஏற்றி கடலில் விட்டதாகக் குறிப்பிடுவதோடு அவர்கள் முதலில் ‘சுப்பாரக’ என்ற நாட்டை அடைந்ததாகவும் அங்கும் அவர்களது கொடுமை காரணமாக அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
‘சிங்ஹலே’ மூட நம்பிக்கை பற்றிய இரு வேறு கருத்துக்கள் உள்ளன. ஒன்று சிங்கத்தின் பரம்பரை பற்றிய கருத்து. மற்றையது புத்தபெருமான் தனது பரிநிர்வாண நிலையின்போது இலங்கையை விஜயனுக்கு வழங்கி அதனைப் பரிபாலிக்குமாறு கடவுளர்களுக்குச் சொல்லி மறைந்தார் என்ற கருத்து.
புத்தபிரானின் வாழ்வின் இறுதிப் பகுதியை பற்றிய தகவல்களையும் அவர் பரிநிர்வாணம் பெற்ற தகவல்களையும் விரிவாக எடுத்துக் கூறுவது அவரது பரிநிர்வாண சூத்திரத்திலாகும். இதில் எந்தவோர் இடத்திலும் விஜயனைப் பற்றியோ இலங்கையைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட குறிப்பிடப்படவில்லை. இந்த சூத்திரத்தின்படி தனது மறைவின் பின்னர் தான் போதித்த தர்மத்தைப் பின்பற்றி நடக்குமாறு போதித்தாரே தவிர தூய்மையான புத்த தர்மம் இலங்கையில் மட்டுமே நிலைத்து நிற்கும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இந்தக் கதையும் மகாவம்ச ஆசிரியரின் கற்பனைக் கதையோ அன்றேல் அக்காலத்தில் சமூகத்தில் நிலவிய நம்பிக்கையோ ஆகுமே அல்லாமல் உண்மையல்ல. இந்த வகையில் “சிங்ஹலே” என்பது வரலாற்று உண்மையல்ல. திரிவுபடுத்தப்பட்ட கற்பனைக் கதையாகும். இது இயற்கைக்கு மாற்றமானதும் வரலாற்றுக்கும் திரிபீடகத்துக்கும் முரணானதுமாகும். இதனைத் தலைமேற் சுமந்து நிற்பவர்கள் மூட நம்பிக்கையையும் உண்மையையும் பிரித்து அறிந்து கொள்ள முடியாத புத்தி குறைந்தவர்களாவர். அல்லது மீண்டும் யார் யாருடையதோ இரத்தத்தை ஒட்டி கை தவறிப்போன அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிக் கொள்ளலாம் என பகற்கனவு காணும் சந்தர்ப்பவாதிகளாவர்.
கலங்கிய குட்டையில் மீன் பிடித்தல்
இற்றைக்குப் பல வருடங்களுக்கு முன்னர் திடீரென பொதுபல சேனா என்ற அமைப்பு தோற்றம் பெற்று மின்னல் வேகத்தில் வளர்ச்சி பெற்றது. ‘ஹலால்’ பற்றிய பீதி எனப்படும் மாயை ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இந்த நாட்டில் சிங்கள முஸ்லிம் பிரச்சினையொன்றை உருவாக்கி விடுவதில் இந்த அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரதிபலிப்பே அளுத்கமை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலாகும்.
“சிங்ஹலே” அமைப்பின் திடீர் தோற்றமும் இதற்குச் சமமானதாகும். சிங்கள பெளத்த இனவாதத்தைத் தூண்டி மோதலொன்றை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்பது தெளிவு.
நாடு சுதந்திரம் பெற்றது முதல் இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தமது ஆதரவை அதிகரித்துக்கொள்வதற்காகவும் எதிரிகளுக்கு தாக்குதல் நடத்துவதற்காகவும் இனவாதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்திக் கொணடனர். ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட இடதுசாரிகள் எனக்கூறிக்கொள்ளும் கட்சிகளும் தெற்கில் இந்தப்பாவச்செயலுக்கு பங்களிப்பு செய்ததோடு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் வடக்கிலும் கிழக்கிலும் இந்த சந்தர்ப்பவாத வழிமுறையினையே கைக்கொண்டனர்.
2015 ஜனவரியில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட சாதகமான மாற்றம் என்னவெனில் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் உட்பட மக்கள் விடுதலை முன்னணியும், தமிழர் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தமது அரசியல் இலக்காக இனவாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொண்டமையாகும்.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியின் போது கொதித்துக்கொண்டிருந்த இனவாத மற்றும் மதவாத போக்குகள் சமூக அரசியல் தளத்திலிருந்து ஒதுக்கப்பட்டமைக்கான காரணம் நாட்டின் தலைவர்கள் இனவாதத்தைத் தூண்டும் போக்கினை நிறுத்தியமையாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே சந்தேகமும் பயமும் முற்றாக ஒழிந்துவிடாவிட்டாலும் மீண்டும் இன மத ரீதியிலான முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் கடந்த ஓராண்டு காலத்தினுள் மிகவும் பலவீனமடைந்துள்ளன.
“சிங்ஹலே” இயக்கம் போன்றவற்றின் இலக்காக இருப்பது அணைந்து போன உள்ளங்களை மீண்டும் குரோதம், பகைமை, அச்சம் என்பவற்றைக் கொண்டு வெறிகொள்ளச் செய்வதாகும். மீண்டும் முஸ்லிம் பூதம், தமிழ்ப் பூதம் ஒன்றைப் புனைந்தால் தமக்கு இந்தச் சவால்கள், அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் ‘பலமான’ தலைமையொன்று அவசியம் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிக்கலாம் என்று “சிங்ஹலே” அமைப்பை ஆயுதமாக இயக்கும் அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள் என்பது உண்மை. மக்களுக்குத் தம்மைப் பாதுகாக்கக்கூடிய ஒருவர் தேவைப்படுவது ஏதாவது அச்சுறுத்தல்கள் இருந்தால் மட்டுமே. “சிங்ஹலே” அமைப்பு இந்தப் பணியையே செய்துவருகின்றது.
இஸ்லாமிய அரசு (Islamic State IS) என்ற அமைப்பு உலகில் பல நாடுகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. அது ஈராக்கிலும் சிரியாவிலும் சில பகுதிகளைக் கைப்பற்றி அங்கு மிகவும் குரூரமான ஆட்சியொன்றை நடாத்துகின்றது. இலங்கை முஸ்லிம்களில் ஒரு தொகையினர் இவ்வமைப்பில் இணைந்துகொள்ள இரகசியமாக நாட்டை விட்டு வெறியேறி உள்ளனர் என்றும் அவர்களில் இருவர் மரணமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் அறிவித்திருந்தன.
புலிகளின் அமைப்புக்கு அந்த அமைப்பு தோல்வியடையும்வரை நிதியினாலும் ஆயுதங்களினாலும் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை. அவர்களுக்கு இல்லாமல் போனது மனித பலமும் சர்வதேச ஆதரவுமாகும்.
அவர்களுக்கு மிக முக்கியமான இந்தக் காரணிகள் இரண்டும் இல்லாமல் போனது அவர்களின் குரூர செயற்பாடுகளாலும் பயங்கர நடவடிக்கைகளினாலுமாகும். ஐ.எஸ். அமைப்பு புலிகள் அமைப்பை விட மிகவும் கொடூரமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம் பக்தர்கள் ஐ.எஸ். அமைப்பைச் சுற்றி ஒன்றுபடுவதற்கு மாறாக நாட்டை விட்டே வெளியேறி தப்பிச்செல்கின்றனர். ஐ.எஸ். அமைப்பின் கொடூரத் தன்மைகளை அறியாத, அதன் கவர்ச்சிகரமான பிரசாரங்களினால் கவரப்பட்ட ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் இவ்வமைப்பில் இணைகின்றனர்.
இலங்கையிலிருந்தும் தமது அமைப்புக்குத் தேவையான அங்கத்தவர்களைச் சேர்த்துக்கொள்ள ஐ.எஸ். அமைப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது உறுதி. அதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கான ஒரே வழி இந்த நாட்டின் முஸ்லிம் இனத்தவர்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் விரக்தியாளர்களின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதாகும்.
முஸ்லிம் விரக்தியாளர்கள் பலம் பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைவது அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப அல்லது பிரான்ஸின் மரீன் லீ பென் (Marine Le Pen) போன்ற தலைவர்கள் மூலம் இலங்கையின் “சிங்ஹலே” போன்ற அமைப்புகளுக்கு இருக்கக்கூடிய பைத்தியக்காரத்தனமான முஸ்லிம் விரோத செயற்பாடுகளாகும்.
கறுப்பு ஜூலை காரணமாகப் புலிகளின் அமைப்பு பலம்பெற்றது. “சிங்ஹலே” போன்ற அமைப்புக்கள் சிங்கள இனவாதத்தைத் தூண்டுவதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களிடையே உள்ள விரக்தியாளர்களுக்கு அதிக நன்மையைக் கொண்டு சேர்க்க முடியும் என்றும் இவ்வாறான அமைப்புகளைத் தோல்வியடையச் செய்வதற்கான ஒரே வழி அதனால் ஏற்படும் தீய விளைவுகளை வெளிப்படுவதன் மூலமே அன்றி அவர்களைச் சட்டத்தின் மூலம் தடைசெய்வதனால் அல்ல.
அரசியல் யாப்பு திருத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி மீண்டும் 1987 இல் ஏற்பட்டது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் தமக்குக் கிடைக்காமற்போன அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள ராஜபக் ஷ அணியினர் முயற்சிப்பது தெளிவு.
அன்றும் இன்றும் நாளையும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தவிர வேறு உய்யும் வழி ராஜபக் ஷ அவர்களுக்கும் ராஜபக் ஷ அணியினருக்கும் வேறில்லை. “சிங்ஹலே” அமைப்பினர் இந்த எதிர்பார்க்கப்படும் மாற்றத்துக்கான களத்தை அமைத்துக்கொடுக்கும் வேலையை செய்கின்றனர்.
“சிங்ஹலே” என்பது வெறும் மூட நம்பிக்கையாகும். இயற்கைக்கும் பெளத்த தர்மத்துக்கும் எதிரான திரிபுபடுத்தப்பட்ட கற்பனைப் புனைகதையாகும். தற்கால அரசியல் கண்காட்சியில் அதிகார வெறிகொண்ட சில அரசியல் தலைமைகளின் கைக்கூலிகளே. அதன் முடிவு சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் இரத்தக் களரியாகும். நாம் அத்தகையதொரு நரகப் படுகுழியில் விழுமளவு அறிவீனர்களல்ல.

Post a Comment