தெஹிவளை பள்ளிவாசல், சிறிய விஸ்தரிப்பு பணிகளுக்கு அனுமதி

-விடிவெள்ளிARA.Fareel-
சட்டரீதியான ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தெஹிவளை பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகள் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்படுகின்றமை தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டதனையடுத்து கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு அவசியம் தேவைப்படும் சில விஸ்தரிப்பு பணிகளை 7 நாட்களுக்குள் பூர்த்தி செய்து கொள்ளும்படி அனுமதி வழங்கியுள்ளார்.
பள்ளிவாசல் யன்னல்களுக்கான கண்ணாடிகள் மற்றும் படிகள் நிர்மாணம் உட்பட சிறிய விஸ்தரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெஹிவளை பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்பு விவகாரத்துக்கு தீர்வுகாணும் வகையில் சந்திப்பொன்று பொலிஸ் உயர் அதிகாரிகள், முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அங்கம் பெறும் பள்ளிவாசல்களின் தலைவர்கள், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் என பலரின் பங்குபற்றுதலுடன் நேற்று திங்கட்கிழமை காலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், எம்.எஸ். மரிக்கார் மற்றும் அசாத்சாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளரும் R.R.T. அமைப்பின் தலைவருமான சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் பாத்யா மாவத்தை பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்தார்.
அவர் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விளக்கமளிக்கையில் பாத்யா மாவத்தை பள்ளிவாசல் மாநகர சபையிடமிருந்து சட்டரீதியான அனுமதி பெறப்பட்டே விஸ்தரிப்பு செய்யப்படுகின்றது. இந்த விஸ்தரிப்புப்பணி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பௌத்த தேரர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். பொலிஸார் இந்த விஸ்தரிப்பு பணிகளை நிறுத்தி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அங்கு வந்த கொஹுவளை பொலிஸார் விஸ்தரிப்பு பணிகளை நிறுத்தியதுடன் விஸ்தரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த மேசன்மாரையும் தடுத்ததுடன் தொடர்ந்தும் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணியில் ஈடுபடுவதென்றால் பொலிஸில் அனுமதி பெறவேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
பொலிஸாரினால் இவ்வாறு தடைசெய்ய முடியாது. பொலிஸார் பயமுறுத்தி வருகிறார்கள். நீதி மன்றம் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்தாலே விஸ்தரிப்பு பணிகளை நிறுத்த முடியும்.
முஸ்லிம்கள் ஆட்சிமாற்றத்திற்கு பெரிதும் ஒத்துழைத்தார்கள் என்றாலும் இன்று பள்ளிவாசல் நிர்மாணங்களும் விஸ்தரிப்புகளும் பொலிஸாரினாலும் தேரர்களாலும் தடுக்கப்படுகின்றன.
இவை சட்டத்துக்கும் நீதிக்கும் புறம்பான செயற்பாடுகளாகும் என்பதை எடுத்து விளக்கினார்.
இதனையடுத்து ஒரு வார காலத்துக்குள் பள்ளிவாசலின் சிறிய விஸ்தரிப்பு பணிகளை மாத்திரம் பூர்த்தி செய்து கொள்வதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார். ஏனைய விஸ்தரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நடைபெற்ற சந்திப்பில் கொஹுவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, தெஹிவளை, கல்கிசை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தும்படி பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தெஹிவளை, களுபோவில, ஸ்ரீமா விகாரை வீதி, இலக்கம் 84 இல் கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டடம் ஒன்று நிர்மாணிப்பதற்கு KBB/ 143/2015 இலக்க அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
என்றாலும் இப்பிரதேச மக்கள் இந்த கட்டட நிர்மாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இது தொடர்பான விசாரணையொன்று நடத்தி தீர்மானம் ஒன்று மேற்கொள்ளும் வரை கட்டட நிர்மாண பணிகளை தற்காலிகமாக நிறுத்தும்படி வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதிகள் களுபோவில பாதியா மாவத்தை சாரனந்த தம்ம பன்சலையைச் சேர்ந்த எனமல்தெனியே சாரனந்த தேரர் களுபோவில களுபோவில ஹத்போதி ரஜமகா விகாரையைச் சேர்ந்த கரவனெல்லே காசியப்ப தேரர் மற்றும் கொஹுவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இப்ப பொல்லு குடுத்து அடிவாங்கிற கதையாப் போச்சி முஸ்லிம்களுக்கு. முன்னர் தனிக்கட்சி ஆட்சியில் நடந்த அனியாயம் ஓர் அளவு. இப்ப இரண்டு பெரும்பான்மை கட்சியும் சேர்ந்த ஆட்சியில் பெரிய அநியாயம் நடக்குது. முஸ்லிம்கள்மீது பேரினவாதிகள் நடத்தும் பிரச்சினைகள் ஒன்றா இரண்டா முழுநாட்டிலும் பிரச்சினை. ஏன் இவ்வாறு செய்கிரார்கள், முஸ்லிம்கள் இலங்கையின் உயரச்சிக்காக பல்வேறு துறைகளிலும் எல்லாக்கால கட்டங்களிலும் உதவி செய்திருக்கின்றார்கள் என்பதற்காகவா?, தனிநாடு கேட்டு நாட்டை சீரழிக்கவில்லை என்பதற்காகவா ?அல்லது முஸ்லிம்கள் கோழைகள் என்று நினைத்து விட்டார்களா? இந்த மாதம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்போம்.
ReplyDelete