Header Ads



இந்நிலை தொடர்ந்தால்...?

-அஷ்ஷைக் அல்ஹாபிழ் ஸப்fரான் பின் ஜஃபfர்-

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

ஒரு ஊரின் கல்வி, பொருளாதார,ஆன்மீக முன்னேற்றம் என்பனவற்றை பயிற்றுவிக்கின்ற இரு அம்சங்கள் காணப்படுகின்றன.அவற்றில் முதலாவது அம்சம், ஓர் ஊரின் பாடசாலை சரியாக இயங்க வேண்டும்.அது சமூகத்தின் கல்வி சார் துறைகளுக்கு வழிகாட்டும் ஓர் அம்சமாகத் தொழிற்படும்.

அடுத்து முக்கியமானதோர் அம்சம் தான் ஓர் ஊரின் பள்ளிவாயல். அவற்றின் நிலைமைகளோ எதிர்கால சமூகத்தின் நிலை என்னவாகலாம் என்ற ஓர் அச்ச உணர்வை உள்ளங்களில் தோற்றுவிக்கின்றது. இது பற்றி சில விடயங்களை இங்கே முன்வைப்பது சாலப்பொருத்தமெனக் கருதுகின்றேன்.

ஒரு தரமான பாடசாலை இயங்க எவ்வாறு போதிய பௌதீக வளங்களுடன் கூடிய சிறந்த, கடமையுணர்வுள்ள, சமூகத்தின் அறிவு,பண்பாட்டு ,ஆன்மீக வளர்ச்சிக்கு தன்னாலான முழு ஒத்துழைப்பையும் நல்கக் கூடிய மனப்பான்மையுள்ள அதிபர் ,ஆசிரியர்,மற்றும் ஊழியர்களின் தேவை அவசியமோ, அவர்களுக்குறிய போதிய வாழ்வாதார வசதிகளை அரசாங்கம் செய்யுமோ அப்போது ஒரு தரமான மாணவ சமூகத்தின் உருவாக்கத்தைக் காணலாம்.அதே போன்று சமூகத்தின் தலைமை பீடமான மஸ்ஜித்கள் தனது பங்களிப்பை நல்குமாக இருந்தால் சமூகத்தில் இரட்டிப்பு முன்னேற்றத்தைக் காணலாம்.ஆனால் நிலைமை???

பள்ளிவாயலின் பங்களிப்பு பூரணமாக சமூகத்தைச் சென்றடைய,அதன் மூலம் அறிவு,ஆன்மீக, பண்பாட்டு எழுச்சிமிக்க சமூக உருவாக்கத்திற்கு மஸ்ஜித்களில் சேவை புரியும் இமாம்கள்,முஅஸ்ஸின்கள் ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்க,உளப்பூரிப்போடு தங்களது மகத்தான சேவையை சமூகத்திற்கு வழங்க அவர்கள் கவனிக்கப்படுகிறார்களா என்றால் இல்லை!!!.

ஒரு கிரிஸ்த்தவ தேவாலயத்தில் கடமைபுரிகின்ற பாதிரிமார்,பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகள் தாங்கள் ஒரு முதுமானியாக (phd),குறைந்தபட்சம் கலைமானியாக (BA)ஆக இருப்பார்.அவருக்குரிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கும்.பௌத்த சமூகத்தில் இந்நிலை அரிதாக இருப்பினும்,கிரிஸ்த்தவ சமூகத்தில் இந்நிலை சிறப்பாகக் காணப்படிகின்றது.அது அவர்களின் சேவையைப் பூரணமாகக் அச்சமூகம் பெற்றுக்கொள்ளக் காரணமாக அமைகின்றது.

ஆனால் இன்று மஸ்ஜித்களில் சேவை புரிபவர்களது நிலையோ சொல்லொனாத் துயர் மிக்கது.இதனால் தாம் கற்ற கல்வியைக் கொண்டு சமூகத்திற்காக உழைக்க திறமையான ஆலிம்கள் தங்களுக்குரிய வாழ்வாதார வசதிகள் முழுமையாக சமூகத்தினால் கவனிக்கப்படாததன் விளைவால் அவர்கள் வேறு துறைகளையும்,வெளிநாடுகளையும் நோக்கிப் பயணிக்கின்றனர்.இதனால் சமூகம் இழக்கின்ற இழப்புக்களுக்கு அதற்குரியவர்களே பொறுப்புக் கூற வேண்டும்.

சமூகத்தின் தலைமைபீடமான மஸ்ஜிதை நிர்வகிக்க வரும் நிர்வாகிகள், ஊரின் கல்வி,ஆன்மீக,பணபாட்டு எழுச்சிமிக்க சமூகத்தை உருவாக்க சகலதுறைகளிலும் உழைக்க திட்டங்களை பள்ளிவாயல் இமாமோடு சேர்ந்து வகுக்க வேண்டியவர்கள் இன்று இமாமையும், முஅஸ்ஸினையும் மேய்க்கத் தகுதிபெற்றவர்களாக இருப்பது மற்றுமொரு இருண்ட பகுதியாகும்.

இமாமும், முஅஸ்ஸினும் மனிதர்கள் என்ற நிலைப்பாட்டிலன்றி மலக்குகளைப் போன்று இயந்திரமாக செயற்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. இத்தனைக்கும் அவர்களுக்குரிய ஊதியம் 15000/- முதல் 25000/- வரை.ஏச்சுப் பேச்சுக்களுடன் , மனைவி,  பிள்ளைகளின் விவகாரங்களைக் கூட கவனிப்பதற்கு முடியாதுள்ள கவலைக்கிடமான சூழ்நிலையில் இமாம்களும், முஅஸ்ஸின்களும்....

இந்நிலை தொடர்ந்தால்...?

இதற்கான தீர்வுத்திட்டங்கள் அவசரமாக உயர்மட்டங்களில் உள்ள புத்திஜீவிகள்,துறைசார்ந்தவர்கள், வசதிபடைத்தவர்கள் முன்வைக்க வேண்டும்.வெறும் வயிற்றுப்  பிழைப்புக்காகவன்றி தன்னுடைய முழு ஈடுபாட்டையும் சமூகத்தின் முன்னேற்றத் துறைகளில் செலுத்துகின்ற, சமூகத்தை வழிநடத்தக்கூடிய ,சிறுவர்கள், வாலிபர்கள்,வளர்ந்தோர், பெண்கள் ஆகியோருக்கென அறிவு,ஆன்மீகம்,பண்பாடு ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு திட்டங்களை வகுத்து படிப்படியாக செயற்பாட்டில் கொண்டுவர உழைக்கக் கூடிய தகுதியுள்ள ஆலிம்களை இணங்கண்டு,அல்லது அவர்களைத் தகுதியடையவர்களாக ஆக்கி சமூகத்தைப் பிரயோசனமடைய வைப்பது அனைவரதும் பொறுப்பாகும். 

அதைவிடுத்து பாழாக்கப்படும் வெள்ளிமேடைகள், பிரயோசனமற்ற ஆலிம்களின் செயற்பாடுகள் என தலைப்பிட்டு விமர்சனம் செய்யத் தெரிந்தவர்கள் ,அவர்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை யோசித்து விமர்சனம் செய்யுங்கள்.

இறுதியாக சமூகம் சிறப்பாக வழிநடத்தப்பட ஆலிம்களது பங்களிப்பு இன்றியமையாததாகும்.எனவே அவர்களுக்குறிய முறையான அந்தஸ்த்தும் வசதிவாய்ப்புக்களும் செய்து கொடுக்கப்பட வேண்டும்,அவர்களால் தவறுகள் இடம்பெறும்பொழுது அவை கண்ணியமாக சுட்டிக்காட்டப்பட்டு முறையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.எனவே எமது சமூகத்தைப் பின்னடைவிலிருந்து விடுவித்து முன்னேற்றப்பாதையில் நகர்த்தி வரலாறு காணும் சமூகமாக மாற்ற மஸ்ஜிதை அடியொட்டிய தமது அனைத்துக் கருமங்களையும் மேற்கொள்கின்ற சமூகம் உருவாக வேண்டும்.

சிந்திப்போம் ... செயற்படுத்துவோம். 

அல்லாஹ் நம் அனைவருக்கும் வழிகாட்டுவானாக!!!

3 comments:

  1. Mashalalah very good article
    Timely needed suggestion
    We should think to reform mosques
    To do that Alims should be qualified
    Do you think alims these Madarasa produce are qualified to lead mosques
    Madarasa give it's product to mosques
    Unless we reform Madarasa we can not any change in mosques
    Problems of mosques are many
    Administration
    Finance
    Leadership
    Trustees
    Imams and their problems
    So many problems
    To do all this in country like us we face many challenge
    So Muslims interlectuals should think about it

    ReplyDelete
  2. பள்ளி நிருவாகிகளுல் சிலர் தாம் சார்ந்த அரசியல் வாதிகளுக்காகவே மஸ்ஜித்களைப் பயன்படுத்துகின்றனர். இத்தகையவர்களால் எப்படி கல்வி, ஆன்மீக, பண்பாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும்?

    ReplyDelete
  3. சமூகத்தின் கண்ணாடி எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள இந்தக் கண்ணாடியை உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்க வாசித்துப்பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.