Header Ads



"நாட்டை காக்க திரண்டு வாரீர், விந்தணு தாரீர்"

சீனாவில் தற்போது நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.

அந்நாட்டில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு பற்றாக்குறையை நீக்க சீன இளைஞர்கள் திரண்டு வந்து விந்தணு தானம் செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல தரப்பட்ட விளம்பரங்கள் குவிந்து வருகின்றன. "நாட்டின் நலனுக்காக விந்தணு தானம் செய்வீர்" என்று அரசாங்கமே விளம்பரம் செய்து வருகிறது.

அந்நாட்டு விந்தணு வங்கிகளில் குறைந்த அளவே அந்நாட்டு இளைஞர்கள் தானம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், தானம் செய்பவர்களில் பாதி பேர் சமூக ஆர்வலர்கள் என்றும் கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் பல்வேறு கலாச்சார மற்றும் அரசியல் கொள்கைகளால் இந்த தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், வேறு ஒருவரின் விந்தணு மூலம் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது என சீனர்கள் எண்ணுவதும் காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தான் விந்தணு தானத்திற்கான விளம்பரங்கள் குவிந்து வருகின்றன.

சீன மக்களின் மனநிலை மாற்றும் விதமாக "ரத்த தானமும் விந்தணு தானமும் ஒன்று தான்"., நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.