தேசிய அரசாங்கம் உடைந்தால்..?
அரசாங்கத்தினுள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக தேசிய அரசாங்கம் உடைந்தால், மைத்திரி தலைமையிலான அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்றில் இதுகுறித்து தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த அரசின் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத மனவருத்தம் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றோர் இதன் காரணமாக கடும் அதிருப்தியுடன் இருக்கின்றனர். அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருபிரிவினர் ரணில் மீது அதிருப்தியுடன் இருக்கின்றனர். அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிர்க்கட்சியும் தொடர்ந்தும் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயாரில்லாத, அதிகாரப் பதவியொன்றை அடைந்துகொள்ளும் ஆவலுடன் இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்திருப்பது போன்று தேசிய அரசாங்கம் உடைவதற்கான வாய்ப்புகளை புறம்தள்ளி விட முடியாது. அதே நேரம் அவ்வாறு தேசிய அரசாங்கம் உடையும் பட்சத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை விட மைத்திரி தலைமையிலான அரசாங்கம் ஒன்று அமைவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக காணப்படுகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியினர் மாத்திரமன்றி, சுதந்திரக்கட்சியில் இருந்து பிரிந்து கடந்த தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் அதிருப்தி குழுவினர் இந்த அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என்றும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment