துருக்கியில் ஜனாதிபதி ஆட்சிக்கு அழைப்பு
துருக்கி ஆளும் கட்சியின் புதிய தலைவராக போக்குவரத்து அமைச்சர் பினாலி யில்திரிம் ஏக மனதாக தேர்வுசெய்யப்பட்டிருப்பதோடு அவர் நாட்டின் புதிய பிரதமராகவும் நியமிக்கப்படவுள்ளார்.
ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகானுடன் இணைந்து ஏ.கே. கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவரான 60 வயது யில்திரிம் ஞாயிறு நடைபெற்ற கட்சி மாநாட்டில் தலைமை பதவிக்கு தனித்து போட்டியிட்டு 1,405 பிரதிநிதிகளினதும் வாக்குகளை வென்றார்.
தற்போதைய பிரதமர் அஹமது டவுடொக்லு பதவி விலகுவதை அறிவித்த நிலையில் தேர்வாகி இருக்கும் யில்திரிமுக்கு அரசு அமைக்குமாறு ஜனாதிபதி எர்துகான் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளியுறவு அமைச்சராக இருந்த டவுடொக்லு எர்துகான் ஜனாதிபதியனதை அடுத்து பிரதமராக தேர்வானர். எனினும் இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பல விவகாரங்களிலும் முரண்பாடு வலுத்த நிலையிலேயே டவுடொக்லு பதவி விலகலை அறிவித்தார்.
குறிப்பாக ஜனாதிபதி அதிகாரத்தை வலுப்படுத்தும் எர்துகானின் திட்டத்திற்கு டவுடொக்லு அதிருப்தியுடன் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் புதிய பிரதமராக நியமிக்கப்படவிருக்கும் யில்திரிம், நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டுவர கட்சி மாநாட்டில் அழைப்பு விடுத்துள்ளார்.

Post a Comment