ரஷ்ய விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள், சுட்டு வீழ்த்தியதாக கூறுவது பொய் பிரச்சாரம் -எகிப்து ஜனாதிபதி
ரஷ்ய விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக கூறுவது பொய் பிரச்சாரம் என எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தா அல்-சிசி தெரிவித்துள்ளார்.
பி.பி.சி.செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அல்-சிசி ”ரஷ்ய விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக கூறுவது பொய் பிரச்சாரம். எகிப்த்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடனும், நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் விதத்துடனும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. சினாய் தீபகற்பம் முழுவதும் எங்களின் முழு கட்டுப்பட்டில்தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜேம்ஸ், ‘விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதற்கான நேரடியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 224 பேருடன் எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு புறப்பட்டு சென்ற மெட்ரோஜெட் ஏர்லைன்ஸ் விமானம் (ஏ–321 ஏர் பஸ்), சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில், 224 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment