றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு..!
-முஹம்மது றினாஸ்-
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் கடந்த ஜூன் மாதம் தொழிலில் இணைத்துக் கொள்ளப்படபட்ட 117 ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட ஊழியர்கள் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை நாட்டில் புதிதாய் மலர்ந்துள்ள நல்லாட்சியில் கைத்தொழில் வர்த்தக வணிகத்துறை அமைச்சின் கீழ் அதிகூடிய வருமானத்தை நாட்டிற்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கும் புல்மோட்டை கனிய மணல் கூடுத்தாபனத்தில் கடந்த ஜூன் மாதம் சட்டரீதியாக உரிய முறையில் நியமனம் வழங்கப்பட்டு பணியில் ஈடுபட்டுவந்த ஊழியர்கள் எவ்வித காரணமும் இன்றி இடைநிறுத்தப்பட்டமை தமக்கு திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி முயற்சி என இடைநிறுத்தப்பட்ட ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
1811 ம் ஆண்டு பூர்வீக மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட புல்மோட்டை கிராமம் கனிய மணலை சுமந்து நிற்கின்ற வளமான பிரதேசமாக திகழ்ந்து கொண்டிடுக்கிறது. 1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனிய மணல் தொழிற்சாலையானது புல்மோட்டை மற்றும் அண்டிய பிரதேச மக்களுக்கு பெரிதளவு நன்மை தரக்கூடியதாக அமையவில்லை. இப்பிரதேச மக்கள் தொழில் பெறுவதிலும் பாரிய அநீதி இழைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்த பேரின சகோதரர்களுக்கு மாத்திரமே இந்நிறுவனத்தில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன, இந்நிலையில் தற்பொழுது வெலிஓயா, கிண்ணியா, புல்மோட்டை, தோப்பூர் மற்றும் கந்தளாய் போன்ற பிரதேசங்களை சேர்ந்த ஊழியர்கள் முறையாகவும் சட்டபூர்வமாகவும் நியமிக்கப்பட்டு இடைநிறுத்தியிருப்பது தெட்டத்தெளிவான அநீதியின் வெளிப்பாட்டை காட்டுகின்றது.
எனவே தமக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தாம் போராட்டத்திலிருந்து விலகப்போவதில்லை என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கான தீர்வு மிக விரைவில் எட்டப்படாது அசாதாரண நிலை தொடருமாக இருந்தால் அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் காத்திருப்பதாக குறிப்பிட்ட பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


Post a Comment