மஹிந்தவின் தோல்விக்கு நானே பிரதான காரணம், வெற்றிகளுக்கு நானே பொறுப்பாவேன் - பஷில்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அரசாங்கத்தினால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதன்படி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான பொலிஸாரின் விசாரணைக்கு தான் பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தயார் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார் .
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு அமெரிக்கா சென்ற முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நேற்று மீண்டும் இலங்கை வந்தடைந்தார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதியும் எனது சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். எனினும் தோல்விக்கு நானே பிரதான காரணமாக அமைந்ததை போன்று அவரின் முன்னைய வெற்றிகளுக்கும் நானே பொறுப்பாவேன்.
ஆகவே அரசியல் ரீதியாக பிழையான தீர்மானங்கள் எடுத்திருப்பினும் நான் ஒருபோதும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்பதனை என்னால் உறுதியாக கூறமுடியும் என்று முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Post a Comment