சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை உடன் பிரகடனப்படுத்துங்கள் - ஜனாதிபதிக்கு கடிதம்
சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கையை ஏற்று சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை உடன் பிரகடனப்படுத்த வேண்டும் என கல்முனை அபிவிருததி போரம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக போரத்தின் தலைவர் அஷ்ஷெய்கு ஏ.பி.எம்.அஸ்ஹர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கையானது அம்மக்களை அவர்களே நிருவாகம் செய்ய ஏதுவாக அமையும்.சுமார் 30 ஆயிரம் சனத்தொகையைக் கொண்ட சாய்தமருதுக்கான தனியான பிரதேச சபை கோரிக்கை சாதாரணமானதும் நியாயமானதாகும். சாய்தமருக்கு தனியான பிரதேச சபை வழங்கப்படுவதனால் கல்முனை மாநகர சபைக்கு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைவடையும் என்பது எமது கருத்தாகும்.அது மட்டுமல்லாது தற்போது கல்முனை மாநகர சபையால் எதிர்நோக்கப்படும் பல அன்றாட நடை முறைப்பிரச்சினைகளுக்கு சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை வழங்குவது ஓரளவுக்கான தீர்வாகவும் அமையும்.இதனால் கல்முனையின் இருப்புக்கு எந்தவிதமானஆபத்தும் ஏற்படப்போவதில்லை.சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை வழங்குவதற்கு கல்முனைக்குடி வாழ் பொது மக்கள் ஒரு போதும் தடையாகவும் இருக்கப்போவதுமில்லை என்பதையம் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
எனவே இம்மக்களின் நீண்ட கால கோரிக்கையை கருத்திற் கொண்டு உடனடியாக பிரதேச சபையை பிரகடனப்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Post a Comment