Header Ads



உங்கள் குழந்தை, சொன்ன பேச்சை கேட்பதில்லையா..?

குழந்தை சொன்ன பேச்சையே கேட்பதில்லை... ஓர் இடத்தில் நிற்பதில்லை... இது பல அம்மாக்களின் புலம்பலாக இருக்கும். ‘குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும்’ என்று ஆறுதல் சொல்லி தேற்றுவார்கள். துறுதுறுப்பும் குறும்புத்தனங்களும் நிறைந்ததுதான் மழலைப் பருவம். இருந்தாலும் அதற்கும் ஓர் எல்லை உண்டு. 

உங்கள் குழந்தை சொன்ன பேச்சையே கேட்பதில்லையா? எந்த ஒரு விஷயத்திலும் முழுமையான கவனம் செலுத்துவதில்லையா? கால் ஓர் இடத்தில் தங்காமல் எந்நேரமும் துறு துறுவென அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறதா? ‘குழந்தைதானே’ என அலட்சியமாக விட்டு விடாதீர்கள். அது ADHD பிரச்னையாக கூட இருக்கலாம். மரபியல் ரீதியாகவும் ரசாயன மாற்றங்களாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன நலப் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. இந்தப் பிரச்னையின் தன்மை குறித்து விளக்குகிறார் மன நல மருத்துவர் கவிதா. 

“Attention Deficit Hyperactivity Disorder என்பதே ADHD யின் விரிவாக்கம். இதன் பெயரிலேயே இந்தப் பிரச்னைக்கான தன்மை அடங்கியிருக்கிறது. Attention Deficit என்றால் கவனித்தல் திறன் குறைபாடு. Hyperactivity என்றால் எந்நேரமும் துறுதுறுவென இயங்கிக் கொண்டிருப்பது. இதில் மூன்று வகைகள் உள்ளன. முதலாவது கவனித்தல் திறன் குறைபாடு மட்டும் இருத்தல். இரண்டாவது ஒரு நிலையில் இல்லாமல் இயங்கிக் கொண்டிருத்தல், இவை இரண்டும் ஒருசேர இருப்பது மூன்றாவது வகை. 

3 முதல் 6 வயதுக்குள் இதற்கான அறிகுறிகள் தெரிய வரும். குழந்தை நாம் சொல்வதையே உள்வாங்கிக் கொள்ளாமல் தன்னிச்சையாக ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடும். ஒரு செயலை முழுமையாக செய்யாமலேயே, வேறு ஏதேனும் செயலை செய்ய ஆரம்பித்து விடும். இப்படியாக நிலையில்லாத மனநிலையில் குழந்தைகள் இருந்தால், அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் கிஞிபிஞி குறைபாடு என்று பொருள் கொள்ளக்கூடாது. ஆலோசனைக்கு அழைத்துச் சென்று குழந்தையிடம் பேசும்போது மட்டுமே அதை உறுதிப்படுத்த முடியும். இக்குறைபாடுள்ள குழந்தைகள் நிலையில்லாத மனநிலையோடு இருப்பதால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரும் கேள்விக்கு உள்ளாகும். 

கரு உருவாகும்போது மூளை உருவாக்கத்தில் ஏற்படும் கோளாறுதான் இப்பிரச்னைக்கு அடிப்படை காரணம். கருவுற்ற பிறகு ஆல்கஹால், சிகரெட் பயன்படுத்தினாலும் இப்பிரச்னை ஏற்படும். மரபியல் ரீதியாகவும் இப்பிரச்னை வரலாம். உடற்கூறு மட்டுமல்ல... சுற்றுப்புறச் சூழ்நிலைகளும் கூட காரணமாகலாம். குழந்தை கருவில் இருக்கும்போதும் பிறந்து தாயின் அரவணைப்பில் இருக்கும்போதும் தாய் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான சூழலை குழந்தைக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பெற்றோருக்கு இடையிலான சண்டை, போதுமான கவனிப்பின்மை ஆகியவை குழந்தையை மன ரீதியாக பாதிக்கும். 

இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீர்வு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் சைக்கோ தெரபி மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும். பெற்றோர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை புரிந்துகொண்டு நடந்து கொள்வது அவசியம். பள்ளி ஆசிரியர்களிடம் குழந்தைக்கு இருக்கும் பிரச்னை குறித்து தெளிவாக விளக்க வேண்டும். இல்லையென்றால், எல்லா மாணவர்களைப் போலவும் குழந்தைகளை நடத்த நேரிடும். விளக்கிச் சொல்கிற போது இக்குழந்தை மீது தனி கவனம் செலுத்தப்படும். குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும், குடும்பத்தார் குழந்தையை எப்படி வழிநடத்த வேண்டும் என்பன சைக்கோ தெரபி மூலம் கற்றுத்தரப்படும்.

அமெரிக்கன் சைக்காலஜி அசோசியேஷன் கணக்கெடுப்பின்படி உலக அளவில் 2003ம் ஆண்டு 7.8%, 2007ம் ஆண்டு 9.5%, 2011ம் ஆண்டு 11% குழந்தைகள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 6% குழந்தைகள் மட்டுமே மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே இப்பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவத்திலேயே இப்பிரச்னையைக் கண்டறிந்து அதனைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பெரியவர்களானாலும் இந்நிலை தொடரும் அபாயம் இருக்கிறது.

No comments

Powered by Blogger.