''பேஸ்புக் அடிமைகளுக்கு' ‘4 பேரிடம் லைக் வாங்கணும்னா..?
(India)
புகழ்பெற்ற ஒரு தமிழ் சினிமாவின் வசனத்தை இப்போது உள்ள இளைஞர்களுக்கு ஏற்றார்போல் கொஞ்சம் மாற்றி சொன்னால் ‘4 பேரிடம் லைக் வாங்கணும்னா எதுவுமே தப்பில்லை’. இந்த எண்ணம்தான் வாலிபர் ஒருவர் அதிக லைக் வாங்குவதற்கும், பின் போலீசில் கைதாவதற்கும் காரணமாக இருந்தது.
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பாசல் ஷேக் (24). கடந்த மே மாதம் அங்குள்ள உயிரியல் பூங்காவிற்குச் சென்றார். அங்குள்ளவர்கள் எல்லாம் வித விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் போல் வழக்கமான புகைப்படங்கள் எடுத்தால் பேஸ்புக்கில் அதிக லைக் கிடைக்காதென்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
மிகவும் வயதான ஆமை என்று ஒரு பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. உடனே அவரது மூளையில் ஒரு யோசனை உதித்து. சுற்றி முற்றி பார்த்த ஷேக் திடீரென அடைத்திருக்கும் கம்பி வலையைத் தாண்டி உள்ளே நுழைந்தார். தன் நண்பனிடம் செல்போனைக் கொடுத்து அந்த வயதான ஆமையின் மீது ஏறி நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதை தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
இந்த சம்பவம் நடந்தது கடந்த வருடம் மே மாதம். ஷேக் நினைத்ததை விட பேஸ்புக்கில் அந்தப் படம் நன்றாக பரவியதால் அதிகமாகவே லைக் வந்தது. கூடவே, போலீசும் வந்தது. நேற்று இவரைக் கைது செய்த போலீசார் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆறு மாதம் சிறை அல்லது 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. “பேஸ்புக்கில் லைக் கிடைக்கும் என்பதற்காகத்தான் இப்படிச் செய்தேன். ஆனால் இதற்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை” என்கிறார் ஷேக்.
பேஸ்புக் அடிமைகளுக்கு ஷேக்கின் கைது ஒரு பாடம் என்கின்றனர் ஐதராபாத் போலீசார்.

Post a Comment