தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், தீவிரவாதத்துக்கு எதிராக மனித சங்கிலி பிரசாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாதத்துக்கு எதிரான பிரசாரம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 1 மாத காலம் (அக்டோபர் 15– நவம்பர் 15) நடந்தது.
நோட்டீஸ் வினியோகம், பேனர், தெருமுனை பிரசாரம், பொதுக்கூட்டம் மூலம் அந்த அமைப்பு பிரசாரம் செய்தது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று மனித சங்கிலி பிரசாரம் நடந்தது.
சென்னையில் சென்ட்ரல் முதல் அண்ணாசாலை சிம்சன் வரை நடைபெற்ற மனித சங்கிலியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று தீவிரவாதத்துக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
கேட்டை விளைவிக்கும் தீவிரவாதத்தை நாட்டை விட்டே விரட்டிடுவோம், இஸ்லாம் போதிப்பது மிதவாதம் என்றும் அது எதிர்ப்பது தீவிரவாதம், தேசத்தை காக்க நேசத்தை வளர்ப்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டை, பேனர்களை வைத்து இருந்தனர்.
மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா, வட சென்னை மாவட்ட தலைவர் அன்சாரி, தென் சென்னை மாவட்ட தலைவர் அப்துல்லா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல் சென்னையின் பல்வேறு இடங்களிலும் மனித சங்கிலி பிரசாரம் நடந்தது.

Post a Comment