மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கொழும்பில் இன்று கூட்டங்கள்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்கள் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளன.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க கோரியும் இல்லையேல் பொது வேட்பாளரின் மூலம் அரசை கவிழ்ப்போம் என எச்சரித்தும் ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் ஒரு கூட்டமும் ஜனாதிபதியை ஆதரித்து அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் மற்றொரு கூட்டமும் இடம்பெறுகின்றன.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கக்கோரி எதிர்க்கட்சியின் பொது எதிரணியினர் இன்று கொழும்பில் கங்காராமை முத்தையா மைதானத்தில் எதிர்ப்பு பேரணிக்கூட்டம் நடத்தவுள்ளனர்.
அரசாங்க பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் இணைத்தலைவர் அதுரலிய ரத்ன தேரர் மற்றும் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் ஏற்பாடு செய்திருக்கும் இவ் எதிர்ப்பு கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரும் பங்கேற்கவுள்ளனர்.
சட்டத்தரணிகள் சங்கம், சுதந்திர ஊடக மையம், ஜனநாயகத்திற்கான தேசிய இயக்கம், சமகி இயக்கம் ஆகிய அமைப்புக்களும் கலந்து கொள்வதுடன், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, இடதுசாரி மக்கள் முன்னணி, சோசலிசக்கட்சி ஆகிய கட்சிகளும் இணைந்து கொள்கின்றன.
இன்று பிற்பகல் மூன்று மணிக்கு முத்தையா மைதானத்தில் இடம்பெறும் இக்கூட்டத்தில் ஐயாயிரத்துக்கு அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோல் பொது எதிரணியில் ஒன்றிணைந்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்ககுமாறு ஜனாதிபதிக்கு தெரிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தமது கோரிக்கையினை ஏற்று அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு இணங்காவிடின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அரசை வீழ்த்த பொது எதிரணியினை உருவாக்குவதாகவும் எதிர்க்கட்சிகளின் பொது எதிரணியினர் இணங்கியுள்ளனர்.
ஆதரவு கூட்டம்
இதேவேளை ஜனாதிபதி முறைமையினை நீக்குவது அடுத்தவொரு தீவிரவாதத்திற்கு வித்திடும் எனக் குறிப்பிட்டு அரசாங்கத்தினை வலுப்படுத்த அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தினால் இன்று கொழும்பு சுகததாச உள்ளரங்கில் அரச ஆதரவு கூட்டமொன்று இடம்பெறுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கமே வெற்றி பெற வேண்டி பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அதேபோல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்காது ஜனாதிபதியை பலப்படுத்தவும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் , தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினர், பொதுபல சேனா அமைப்பினர், சிங்கள ராவய அமைப்பினர் உள்ளிட்ட பெருளவானோர் இந்தக் கூட்டததில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் இக்கூட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக் ரணவக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தாம் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
.jpg)
Post a Comment