பௌத்த பிக்குகள் 5 பேர் உண்ணாவிரதம்
கல்பிட்டி, கண்டக்குளி பகுதியிலுள்ள விஹாரைக்கு முன்பாக ஐந்து பிக்குகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேலும் மூன்று பிக்குகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக தேவைகளின் அடிப்படையிலேயே இடமாற்றம் வழங்கப்படுவதாகவும், அதன் அடிப்படையில் கல்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிடுகின்றார்.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சேவை புரிவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எப்பொழுதும் தயாராகவே இருக்கவேண்டும் என்றும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கல்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுடன் அதுகுறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment