உங்கள் செல்போன் தவறி விழுந்தால் என்ன செய்வீர்கள்..?

ஜெர்மனியில் மீன்பிடிக்கும் போது, குளத்தில் தவறி விழுந்த தனது செல்போனை எடுக்க தண்ணீர் முழுவதையும் சிறுவன் ஒருவன் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஜெர்மனியில் உள்ள மீன் பிடிக்கும் குளம் ஒன்றில், 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவனது செல்போன் குளத்தில் தவறி விழுந்தது. விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் என்பதால், அதனை எடுக்க ஒரு நூதன ஐடியா செய்தான். அதன்படி, அன்று நள்ளிரவில் மீண்டும் குளத்துக்கு நண்பர்களுடன் சென்றான். பெரிய பைப்கள் மற்றும் 2 மோட்டார்களை அவர்கள் கொண்டு சென்றிருந்தனர். அந்த மோட்டார்கள் மூலமாக, குளத்தின் நீரை உறிஞ்சி அருகே உள்ள டாய்லெட்டுக்குள் தண்ணீரை வெளியேற்றினார்கள்.
ஆனால் டாய்லெட்டில் நீர் வெளியேறும் வசதி இல்லாததால் குளத்து நீர் முழுவதும் அப்படியே வழிந்து கார் பார்க்கிங்கில் சென்று நிரம்பியது.இதை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுவனை பிடித்தனர். விசாரணையில், தனது செல்போனில் உள்ள மெமரி கார்டில் நண்பர்களுடன் எடுத்த படங்கள், ஏராளமான போன் நம்பர்கள் இருப்பதால் இவ்வாறு செய்தேன் என்று கூறினான். சிறுவன் என்பதால் அவனுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. பின்னர் சேதமடைந்த குளம் மற்றும் கிளப் டாய்லெட்டுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு குளத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
Post a Comment