Header Ads



அளுத்கம: இனவாதத்தின் பலிபீடம்..!

(ஏ.எல்.நிப்றாஸ்) 

போயா தினங்களில் சிலருக்கு ஞானம் பிறக்கும் இன்னும் சிலருக்கு மனநிலை பாதிப்பு தீவிரமடையும் என்று சொல்வது சரியாகத்தான் இருக்கின்றது. சித்த சுவாதீனமற்ற ஊதாரி ஒருவன் எப்படி மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டு தனது ஆடைகளை கிழித்துக் கொண்டு வீதியெல்லாம் சுற்றித் திரிவானோ அச்சொட்டாக, அதுபோலவே இனவாத சக்திகளின் செயற்பாட்டால் இந்நாட்டின் ஆடைகளும் கிழித்தெறியப்பட்டு மானம் காற்றிலேறி, நிர்வாணமாக்கப்பட்டு இருக்கின்றது. 

இனச்சுத்திகரிப்பு ஒத்திகை

மாதக் கணக்காக திட்டமிடப்பட்டு, திகதி மாத்திரம் குறிக்கப்படாமல் இருந்த இனஅழிப்பு திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட விளைவுகளைத்தான் இன்று சிறுபான்மை முஸ்லிம் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தவிரவும், சில சாத்திரக்கார அரசியல்வாதிகள் கற்பிதம் சொல்வதைப் போல இது வெளிநாட்டு சதித்திட்டமோ, ஆட்சியை கவிழ்ப்பதற்காக வேலைத்திட்டமோ, அரச சார்பற்ற நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலோ அல்ல. முற்றுமுழுதாக நமது கொல்லைப்புறத்தில,; நம்முடைய பசளையில் வளர்ந்த இனவாதிகளதும் அவர்களது கூட்டாளிகளதும் இனச் சுத்திகரிப்பு ஒத்திகையே அன்றி வேறொன்றுமில்லை. 

மகிந்த தேரர் இலங்கைக்கு வந்திறங்கிய பொசன் பௌர்ணமி தினத்தை பௌத்த மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். வீதிகள் அலங்கரிக்கப்பட்டு ஒளிவிளக்கு தோரணங்கள் நடப்பட்டிருந்தன. 'தன்சல'; தான சாலைகளில் முஸ்லிம்களும் தமிழர்களும் கூட வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அப்போதுதான் நமது கெட்ட காலம் பிறந்தது. 

அளுத்கம பகுதியை ஊடறுத்து தேரர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த வேனின் சாரதிக்கும் வீதியில் நின்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவருக்கும் இடையில் வாகனத்திற்கு வழிவிடுதல் பற்றி எழுந்த வாக்குவாதம் கைகலப்பின் எல்லையை தொட்டுவிட்டு அடங்கியது. இச்சம்பவம் குறித்த பிக்குவுக்கு தன்மானப் பிரச்சினையாகி இருக்க வேண்டும். அவரது காவியுடை அவரை வேறும் ஒரு கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கவும் இடமுள்ளது. இதனால் இது பற்றிய முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த அந்த பிக்கு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

உங்களுக்கு தெரியும் நமது ஊர்களில் சிறிய சண்டை இடம்பெறுகின்ற வேளையில் அதில் ஒரு தரப்பினர் ஓடோடிச் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு (தமக்கு காயம் எதுவும் இல்லை என்றாலும்) உடம்பு வலிப்பதாக கூறிக் கொண்டு வைத்தியசாலையில் மூன்று நாட்களுக்கு படுத்துக் கொள்வார்கள். அப்படித்தான் கிட்டத்தட்ட இதுவும். உண்மையில், இது ஒரு சின்ன தள்ளுமுள்ளு மட்டுமேயாகும். பேரிதாக சண்டை எதுவும் இடம்பெறவில்லை என்று அளுத்கம நண்பர்கள் கூறுகின்றனர். உண்மையாக சொல்லப்போனால் இவரது உடம்பில் எந்தக் காயத்தையோ நோவையோ கண்டறிய முடியாமல் வைத்தியர்கள் திண்டாடி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

உண்மையிலேயே, இப்போதிருக்கின்ற களநிலைவரத்தில் பிக்கு ஒருவர் அதுவும் பொசன் தினத்தில் முஸ்லிம்களால் தாக்கப்பட்டிருந்தால் அவரது முகமும் காயங்களும் எந்தளவுக்கு பரப்புரைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்? ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பதிலிருந்தே இது வாய்த்தர்க்கத்திற்கு சற்று அதிகமான பிரச்சினை மட்டுமே என்பது புலனாகின்றது. 

சரி அதை விடுங்கள். அப்படி பிக்கு ஒருவரை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியிருந்தால் அது மகா தவறுதான். அதற்கு வக்காளத்து வாங்குவதற்கு நாம் தயாரில்லை. அந்த அடிப்படையிலேயே மேற்படி சம்பவத்திற்கு குறித்த இளைஞர்கள் பொலிஸார் முன்னிலையில் மன்னிப்புக் கோரியதாக அறிய முடிகின்றது. இது அவர்;களுக்கு போதாது என்றால், நீங்கள் அவர்கள் சிறையில் அடைத்திருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், அப்படி சட்ட வரண்முறைக்கு உட்பட்டுச் செயற்படுவதை விட்டும் இனவாத சிந்தனை அவர்களை தடுத்தது.

பொறுப்பற்ற செயற்பாடு
பொலிஸ் நிலையம் முன்பாக குழுமிய நூற்றுக் கணக்கானோர் அந்த இளைஞர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கொஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பிக்குவை அழைத்து வருவதற்காக ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அதன் இறுதியில் பொது பலசேனாவின் முழு ஆதரவுடன் அப்பிரதேசத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. 

பேருவளை, அளுத்கமை, தர்காநகர் பகுதிகளில் ஏற்கனவே பதற்றம் நிலவி வருகின்ற வேளையில் இப்படியான கூட்டமொன்று அனுமதி வழங்க வேண்டாம் என்று சிவில் அமைப்புக்கள் பல அரசாங்கத்தையும் அதிகார தரப்பினரையும் பலமுறை கோரியிருந்தன. ஆனால் பள்ளிக்கூடச் சிறார்களின் பலூன் ஊதும் போட்டிக்கு அனுமதி வழங்கியது போல எவ்வித சலனமும் இன்றி அதிகாரிகள் இக்கூட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டியிருந்தனர். 

கூட்டத்தில் ஞானசார தேரரின் உரையே ஸ்பெஷலாக இருந்தது. அவரது உரையில் இனவாதம் கரைபுரண்டோடியது. நாகரிகம் இல்லாத இங்கிதம் தெரியாத வார்த்தைகளால் அந்த மேடையின் மரியாதையை அவர் குலைத்தார். எவ்வளவு மோசமாக முஸ்லிம்களை பேச முடியுமோ அவ்வளவுக்கு கீழ்த்தரமாக பேசியதை யுடியூப் வீடியோக்களில் இப்போதும் காணலாம். 

இனவாதத்தில் ஊறிப்போயுள்ள மூடர்களை தூண்டிவிடும் அவரது முயற்சி பலிக்கத் தொடங்கியிருந்த சமயம் அது. எல்லோரும் கூட்டம் முடிந்து வீதிகளில் போய்க் கொண்டிருந்தபோது முஸ்லிம்கள் தம்மீது கல் எறித் தாக்குதல் நடத்தியதாக கூறி, பரந்துபட்ட எதிர்தாக்குதலை சிங்கள இனவெறியர்கள்; தொடக்கி வைத்தனர். 

நேர்மையாக நோக்கினால் இது இருவருக்கு இடைப்பட்ட சிறு பிரச்சினை. ஒரு வாகனத்திற்கு வழிவிடுவதில் ஏற்பட்ட விவகாரம். இதனை பிக்குவும் முஸ்லிம் இளைஞர்களுமே பேசித் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். மாறாக இது இரண்டு சமூகங்களுக்கு இடையிலான ஒரு விவகாரம் அல்ல. இலங்கையரின் வீட்டிற்கு முன்னால் இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்துவிட்டார் என்பதற்காக இருநாடுகளுக்கும் இடையில் பகைமையை ஏற்படுத்தி யுத்தப் பிரகடனம் செய்ய முடியுமா? அப்படிச் செய்வதை யாரும் புத்திசாலித் தனம் என்று சொல்வார்களா? மிகச் சரியாக மேலே சொன்ன சம்பவமும் இதற்கு ஒப்பானதுதான். 

சில வருடங்களாக முஸ்லிம்களில் இனவாதம் குறிவைத்துச் செயற்பட்டு வருகின்றது. இது விடயத்தில் அப்பாவிச் சிங்கள சகோதரர்கள் விதிவிலக்கு. அவர்கள் மிக நல்லவர்கள். சிறுபான்மை மக்களை விட தமிழர்களையும் முஸ்லிம்களையும் வெகுவாக மதிக்கின்ற பல சிங்களவர்கள் கண்டிருக்கின்றேன். ஆயினும், அநாகரிக தர்மபால காலத்திலிருந்து சகோதர இனங்களை அடக்கி ஆளவே இனவாத சக்திகள் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார, சமய ரீதியில் முன்னேறுவதை இனவாதிளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. குஜராத் அல்லது மியன்மார் பாணியில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை இனஅழி;ப்புச் செய்து ஒன்றுக்கும் இயலாத சமூகமாக மாற்ற வேண்டும் என்று சில அரசியல்சக்திகளும் கடும்போக்கு இயக்கங்களும் முன்னமே திட்டங்களை தீட்டியிருந்தன. 

கடந்த இரண்டரை வருடங்களாக முஸ்லிம்கள் பல தடவை சீண்டிப் பார்க்கப்பட்டனர். ஆனால் பொறுமையைக் கொண்டு உதவியை நாடி நின்ற முஸ்லிம்கள் சிங்களவர்களை மிகக் கவனமாக எதிர்கொண்டனர். ஒரு இனவாதியின் தோளில்  ஆதரவாக கையைப் போட்டாலும் அது அவரை அடித்ததாவே சித்தரிக்கப்படும் என்பதை நன்கு அறிந்து முஸ்லிம்கள் செயற்பட்டனர். முஸ்லிம் சமூகம் சிங்கள கடும்போக்கு சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது கடுமையான விமர்சனத்திற்குரியது. இருப்பினும் இவ்வாறு மெத்தனப் போக்கை முஸ்லிம்களின் தரப்பு கடைப்பிடித்ததால் அளுத்கமவில் இடம்பெற்றது போன்ற பாரிய வன்முறைகள் இடம்பெறுவதற்கு நீண்ட காலம் எடுத்துள்ளது என்று கருதவும் இடமிருக்கின்றது. 
காத்திருந்த நேரம்

இப்படியான ஒரு இனவன்முறைக்காகத்தான் பொது பலசேனாவும் அவற்றுக்கு சூடம்காட்டுகின்ற சக்திகளும் நெடுநாளாக காத்திருந்திருக்கின்றன என்பதை அளுத்கம கலவரத்திற்கு முன் - பின் இடம்பெற்ற சம்பவங்களை வைத்து ஊகிப்பது கடினமான காரியமல்ல. நமது கெட்டகாலம் அவர்களுக்கு நல்ல காலமாக இருந்தது. 

முஸ்லிம்களை இன வன்முறை ஒன்றுக்குள் சிக்கவைத்து, அதன் மூலம் அவர்களை சிங்கள இனத்தின் எதிரிகளாக காட்டி ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக திரட்டுதல், முஸ்லிம்களுக்கு சார்பாக அரசு செயற்பட்டால் (அப்படி நடக்காது) ஆட்சிமாற்றமொன்றுக்காக சிங்கள மக்களை திசை திருப்புதல், அரசாங்கத்துடன் முஸ்லிம்கள் முரண்பட்டால் அரச ஆதரவுடன் முஸ்லிம்களை கருவறுப்பு செய்தல், முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்துதல், அவர்களது இன மத அடையாளங்களை இழக்கச் செய்தல்.... என பல உள்நோக்கங்களை தனித்தோ கூட்டாகவோ இனவாத சக்திகள் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. 

பொதுபலசேனா போன்ற கடும்போக்கு இயக்கங்கள் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தது என்பது வெறும் கற்பனையல்ல. சில மாதங்களுக்கு முன்னர் ஒருவித அநாமேதய எஸ்.எம்.எஸ்.களும் சமூக வலைத்தள தகவல்களும் வெளியாகியிருந்ததை இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன். 'ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலரும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் மீது வன்முறைகளை மேற்கொள்ள திட்டம்'; என்ற அடிப்படையில் அந்த குறுந்தகவல்களை உலா வந்தன. இது தவிர சில சிங்களவர்கள் தமது முஸ்லிம் நண்பர்களுக்கு இது குறித்து சாடைமாடையாக எச்சரித்திருந்ததாகவும் ஊர்ஜிதமற்ற விதத்தில் இப்போது தெரியவந்திருக்கின்றது. இவை அநாமேதய கட்டுக்கதைகள் என்றே கடந்த வாரம் வரைக்கும் நாம் நம்பிக் கொண்டிருந்தோம். 

அளுத்கம கலவரத்தின் போது எல்லாம் சொல்லி  வைத்தாற்போல் நடைபெற்றிருக்கின்றன. முஸ்லிம்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டிருக்கின்றார்கள், கல்லுகளாலும் பொல்லுகளாலும் தாக்கப்பட்டிருக்கின்றார்கள், வீடுகளுக்குள் தூங்கிங் கொண்டிருந்த பெண்கள், பிள்ளைகள் ஓட ஓட விரட்டப்பட்டுள்ளார்கள், பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன, முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் தேடிப் பிடிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்;தப்பட்டுள்ளன, தனியாக சிக்கிய பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு முன்னரான அனைத்து வன்கொடுமைகளையும் அனுபவித்திருக்கின்றார்கள்.  

இடைக்கால கணக்கெடுப்பில் 4 பேர் பலியாகி இருக்கின்றனர், சுமார் 100 இற்கு மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றார்கள், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியாகி பொது இடங்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இத்தனைக்குப் பிறகும் இன்னும் தென்பகுதியில் அமைதி திரும்பவில்லை. சொல்லொணா துயரங்களோடு அச்சத்துடனும் வலியுடனுமே அவர்களது ரணப் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. 

புத்தரின் போதனைகள் மீறப்படத் தொடங்கி நெடுங்காலமாயிற்று. இதில் அளுத்கமை கலவரம் ஒரு தனித்த நிகழ்வு மாத்திரமே. அஃறிணைகளான மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை மிருகவதை என்றும் அதைத் தடுக்கக்கோரியும் கூப்பாடு போட்ட இனவாத சக்திகள் அளுத்கம முஸ்லிம்களை படுகொலை செய்ததையும் வாட்களால் வெட்டியதையும் எங்ஙனம் நியாயப்படுத்தப் போகின்றார்கள்? மாடுகளுக்கு வழங்கப்படும் உயிர் உத்தரவாதத்தைக் கூட தர  மறுக்குமளவுக்கு கேவலம் கெட்ட சமூகமாக இந்நாட்டு முஸ்லிம்காள் ஆக்கப்பட்டிருக்கின்றார்களா? 
முழுப் பூசணிக்காய்
இக் கலவரத்தின் போது முஸ்லிம்களை எந்தச் சிங்களவனும் ஆயுதத்தால் தாக்கவில்லை என்று பலசேனாக்கள் சொல்லியிருக்கின்றன. இதைவிடவும் ஒரு மகா பொய்யை சோடிக்க முடியாது. சிங்களவர்கள் என்று (சாறம், முகத்தோற்றத்தை வைத்து) அடையாளப்படுத்தக் கூடிய பலர் பொல்லுகள், கல்லுகள், வாள்களோடு நிற்கின்ற புகைப்பட மற்றும் வீடியோக் காட்சிகள் தாராளமாகக் கிடைக்கின்றன. தேரர்கள் ஒரு சிலரும் ஆண், பெண் உள்ளிட்ட சிங்கள கும்பலும் தாக்குதல் நடாத்துகின்ற காட்சிகள் ஏகத்துக்கு கிடைக்கின்றன. 

என்னதான் உத்தியோகப்பற்றற்ற தணிக்கை ஒன்றை அமுலுக்கு கொண்டு வந்தாலும், தொலைத் தொடர்பு சாதனங்களால் நிரம்பிய இந்த யுகத்தில் உண்மைகள் பரவுவதை தடுக்க முடியாது போய்விட்டது. காடையர்களின் கைகளில் இருக்கின்ற கத்திகளுக்கும் முஸ்லிம்களின் உடம்பில் இருக்கின்ற காயங்களுக்கும் சம்பந்தமில்லை என்றால், அக்கத்திகள் இளநீர் வெட்டுவதற்காக அல்லது மாங்காய் சீவுவதற்காக கொண்டு வரப்பட்டவை என்பதை நிரூபிக்க வேண்டும்.  அதுபோல முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவில்லை என்று கூறுபவர்கள், அப்படியென்றால் முஸ்லிம்கள் தற்கொலை செய்து கொண்டனரா அன்றேல் தமக்குள் சண்டையிட்டு மாண்டுபோயினரா என்பதற்கும் ஆதாரங்களை தர வேண்டியிருக்கும். 

முன்னமே சொன்னது போல் அளுத்கமவில் இப்படியான ஒரு கூட்டத்திற்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது. அப்படி அனுமதி கொடுத்திருந்தால் கூட நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ள வேண்டும். அதைத்தான் செய்யவில்லை என்றால் கூட கலவரம் ஒன்று மேலெழுகின்ற போது சட்டம் தன் கடமையைச் செய்திருக்க வேண்டும். மோதல்களை குறைப்பதற்காக குறைந்தபட்ச பிரயத்தனத்தையாவது பாதுகாப்பு தரப்பினரும் அதிகாரிகளும் மேற்கொண்டிருக்க வேண்டும். துரதிர்ஷடவசமாக இவ்விடயங்களில் ஏதாவது ஒன்றிலேனும் திருப்தி கொள்ள முடியவில்லை. 

முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் எரிக்கப்பட்ட போது, பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, முஸ்லிம் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் விரட்டி விரட்டி தாக்கப்பட்ட போது கிட்டத்தட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புத் தரப்பினர் அங்கு நின்றிருந்தனர். அவர்கள் சிங்கள தரப்புக்கு பக்கச் சார்பாக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யாகவே இருக்கட்டும். ஆனால், இவ்வாறு தாக்குதல் நடத்துவோரை தடுக்கவோ கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று முற்போக்கு சக்திகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டை எக்காரணத்தை முன்னிறுத்தி மறுக்கவியலும்? 

ஆனபோதும், அளுத்கம கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ஒரேயொரு காத்திரமான நடவடிக்கை ஊரடங்குச் சட்டமும் உப்புக்குச் சப்பான சில கைதுகளும் எனலாம். ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டும் சமய விவகாரங்களுக்கென தனிப் பொலிஸ் பிரிவு இருந்தும் இனவாதம் தானாக அடங்கும் வரைக்கும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்காக பாதுகாப்பு தரப்பினரை குறைகாண முடியாது. அவர்கள் தொழிலுக்கு வந்திருக்கின்றார்கள். மேலதிகாரி சொல்வதை செய்வார்கள். மேலிடத்து உத்தரவுகளுக்கு அப்பாற்பட்டு செயற்படும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதை மறந்து விடக்கூடாது. 
பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்;ப்பாட்டம் நடாத்தியிருந்தால், எதிர்க்கட்சி ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தால் தமது முழுப்பலத்தையும் அதற்கெதிராக படைத் தரப்பு பயன்படுத்தியிருக்கும். நீர்பீய்ச்சியடிக்கும் இயந்திரங்கள், குண்டாந்தடி, கண்ணீர்புகைக் குண்டுகளை பாவித்து இவ்வாறான ஆர்ப்பாட்டக் காரர்களை கலைந்தோடச் செய்வதுதான் வழமை. அதிலும் குறிப்பாக சுத்தமான குடிநீர் கேட்டுப் போராடிய வெலிவேரிய மக்களை நோக்கி துப்பாக்கிளையும் திருப்பியிருந்தனர் படையினர். அதேபோல், பொறுப்புவாய்ந்த பலர் அளுத்கமவும் அயற்பிரதேசங்ளும் இனவாத தீயில் கருகுகின்ற போது சோளக்காட்டு பொம்மைகள் போல் நின்றிருந்ததாகவும்  தென்னிலங்கை சிங்கள நண்பர் ஒருவர் தனது முகப் புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.

உலகத்தின் அக்கறை
உண்மையில் அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் வாழும் சிங்கள மக்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் இனவாதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். ஒரு சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் பங்கு கொண்டிருந்தாலும் கணிசமானோர் நடுநிலை வகிக்கின்றனர். இன்னும் சிலர் முஸ்லிம்களை காப்பாற்றுவதற்காக விடிய விடிய காவலுக்கு இருப்பதாகவும் கேள்விப்படுகின்ற போது ஆறுதலாக இருக்கின்றது. இது தவிர, சில சிங்கள சகோதரர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பிலும் முஸ்லிம்கள் சிங்களவர்களின் இடங்களிலும் அடைக்கலம் புகுந்திருக்கின்றார்கள். 

அப்படியென்றால், ஆயுதங்களோடு தென்பகுதி வீதிகளில் ஏவி விடப்பட்டுள்ள இந்த இளைஞர்கள் யார்? வெளியிடங்களை சேர்ந்த இலகுவில் பிரதேசவாசிகளால் அடையாளம் காண முடியாத சிங்கள சண்டியர்கள் கூட்டம் கூட்டமாக அழைத்து வரப்பட்டு களத்தில் இறக்கிவிடப்படுவதாக அங்கு சென்று திரும்பிய ஊடக நண்பர் ஒருவர் கூறியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் - இனவாதத்தின் தூண்டுதலாலும், ஒரு சாப்பாட்டுப் பார்சலுக்காக அல்லது சாராய போத்தலுக்காவும் இவர்கள் இப்படி நடந்து கொள்வதாக அவர் சொன்னபோது அந்த ஆச்சரியம் இல்லாமல் போய்விட்டது. 

அங்கு நடக்கின்ற சம்பவங்களை ஊடகங்கள் பெருப்பித்துக் காண்பிப்பதாக வழமைபோல ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. உண்மையில் ஊடகங்கள் இன்னும் உண்மை நிலைவரத்தைக் கூட காட்சிப்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். அங்கு நடந்திருக்கின்ற அட்டூழியங்களை வெளியில் சொன்னால் முழு நாடுமே சர்வதேசத்தின் முன்னால் வெட்கித் தலைகுனிய நேரிடலாம் என்பதற்காக ஊடக தர்மத்தோடு சில ஊடகங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரச ஊடகங்களும் சில சிங்கள ஊடகங்களும் நாட்டில் எதுவும் நடக்கவில்லை என்று காட்டுவதற்கு முயன்று அடிக்கொரு தடவை தோற்றுப் போகின்றன. ஆனால் எவ்வளவு முயன்றும் அளுத்கமை கலவரத்தை உலகின் கண்களிலிருந்து மறைக்க இயலவில்லை என்பதே நிதர்சனம். 

அளுத்கம விவகாரத்தில் உலக நாடுகள் அதீத கவனம் செலுத்தியிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. கனடா பயண எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக தென்பகுதியில் நடைபெறும் அடாவடித்தனங்களை உடன் முடிவுக்கு கொண்டு வந்து, சம்பந்தப்பட்வர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பும் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளையும் பகிரங்க அழுத்தத்தை பிரயோகித்துள்ளனர். 

இது இவ்வாறிருக்க அளுத்கமவுக்கு நேரடியாக விஜயம் செய்த ஜனாதிபதி குற்றவாளிகளை தண்டிப்பதாக உறுதியளித்துவிட்டு கொழும்புக்கு திரும்பியிருந்த நிலையில், 15 முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அவசரமாக அவரைச் சந்தித்து நிலைமைகளை விபரித்ததுடன் இதற்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.  

ஆக, அரசாங்கம் இதனை எந்தக் கோணத்தில் பார்க்கின்றதோ தெரியாது. ஆனால் இது உண்மையில் ஆட்சிக்கு இது ஒரு தேவையற்ற சவால் என்றே அவதானிகள் கருதுகின்றனர். ஏற்கனவே யுத்;தகால குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றபோது மீண்டும் ஒரு இனச் சம்ஹாரம் குறித்த ஆதாரங்கள் சர்வதேசத்தின் கைகளுக்கு கிடைப்பதற்கு அளுத்கம சம்பவம் வழிவகுத்திருக்கின்றது. இதன் எதிர்விளைவுகள் - சிங்களத் தொழிலாளர்கள் முஸ்லிம் நாடுகளில் வேலையிழப்பதுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை என்பதை காலம் உணர்த்தும். 

அளுத்கம விவகாரம் பூதாகாரமாகியிருந்த கடந்த வாரத்தில் இந்நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியமல் முஸ்லிம்கள் தடுமாறிப்போயினர். முன்னமே பல முறை நான் எழுதியது போல தமிழர்களுக்கு முன்னரே இன ஒடுக்குமுறையை சந்தித்துவிட்ட இந்நாட்டு முஸ்லிம்கள், இனவாதத்திற்குள் வாழ்வதற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்களே தவிர அதனை எதிர்கொள்வதற்கு இன்னும் தம்மை தயார் படுத்திக் கொள்ளவில்லை. அதற்கான வழிகாட்டல்களையும் முஸ்லிம் தலைமைகள் கொடுத்திருக்கவில்லை. 
தலைமைகளின் முயற்சி

ஜனாதிபதி நாட்டில் இல்லை என்பதால் நிலைமை கைமீறிப் போகலாம் என்பதை அறிந்து கொண்ட முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் இது விடயத்தில் கூடிய அக்கறை எடுத்தனர். நீதி அமைச்சராக இருந்து கொண்டு தமது சமூகத்து மக்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்கள் தொடர்பில் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாதிருப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அறிவித்தார். 

இவ்விவகாரத்தின் பின்னணியில் மு.கா. அரசாங்கத்தில் இருந்து விலகும் என்றும் அதற்கான அறிவிப்பை தலைவர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊடாகவியலாளர்களை கூட்டி 'அரசாங்கத்தை அசௌகரியப்படுத்த விரும்பவில்லை' என்று ஹக்கீம் சொன்ன போது எல்லாம் 'சப்' என்று ஆகிவிட்டது. 

என்றாலும் இதுதான் நடக்கும் என்று முன்னமே தெரியும். தூம் அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டால் சில உறுப்பினர்கள் தனித்தனியாக சென்று அரசுடன் ஒட்டிக் கொள்வார்கள் என்ற காரணத்திற்காகவுமே ஹக்கீம் இராஜினாமா செய்யும் எண்ணத்தை கைவிட்டிருக்கக்கூடும். 

மறுபுறத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட்  பதியுதீன் மிகுந்த மனவேதனை அடைந்திருக்கின்றார் என்பதை அவரது பேச்சுக்களில் இருந்து உணர முடிகின்றது. அகதி வாழ்வை அனுபவ ரீதியாக உணர்ந்த றிசாட் 'வந்தால் வரட்டும் போனால் போகட்டும்' என்று எதனையும் பற்றியும் கணக்கெடுக்காமல் மக்களுக்காக குரல் கொடுக்கின்றார். அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியுடன் கூட இது விடயமாக கடுமையாக வாக்குவாதப்பட்டதாக தகவல்கள் கசிந்திருந்த நிலையில் இது தவறான தகவல் என பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.  
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக பெரிதாக வாயைத் திறக்காதிருந்த தேசிய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான அதாவுல்லாவைக் கூட அளுத்கம இனக்கலவரம் வாயைத் திறக்க வைத்திருக்கின்றது. இதுகால வரை பேச வேண்டிய இடத்தில் பேசிக் கொண்டிருப்பதாக' கூறிய அமைச்சர், (அவ்விடங்களில் பேசி பலனில்லை என்ற முடிவுக்கு வந்தாரோ என்னவோ தெரியாது) பாராளுமன்றத்தில் முக்கியத்துவமிக்க ஒரு உரையை ஆற்றியிருக்கின்றார். அரசாங்கத்திற்கு கோபமூட்டாத விதத்தில் மிகக் கவனமாக இந்த உரையை அவர் நிகழ்த்தியிருந்தாலும் மக்களுக்காக அவர் பகிரங்கமாக குரல் கொடுக் முன்வந்துள்ளமை முஸ்லிம்களுக்கு நல்லதொரு தைரியத்தை கொடுத்திருக்கும் என நம்புகின்றேன்.  

ஆனால், பெரும்பான்மை கட்சிகளுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இழவு வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்துவிட்டு, கொழும்புக்கு  வந்து அனுதாப அறிக்கை விடுவதுடன் இருந்து விடுகின்றார்கள். அரசாங்கத்தை விட்டு வெளியேற ஏன் தயங்குகின்றீர்கள் என்று முஸ்லிம் தலைமைகளிடம் கேட்டால்.... அரசாங்கத்தை பகைத்துக் கொண்டு அல்லது அதிலிருந்து வெளியேறிவிட்டு எதனையும் சாதிக்க முடியாது என்று பக்கம் பக்கமாக விளக்கமளிப்பதை காண்கின்றோம். இக் கருத்தை சற்று அலசி ஆராய வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் பொதுவில் நிபந்தனையற்ற ஆதரவுக்கு இணங்குகின்ற முஸ்லிம் மக்கள் தமக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுகின்ற வேளையில் அரசாங்கத்திலிருந்து அமைச்சர்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது வாடிக்கையே. இப்போதிருக்கின்ற ஆட்சிச் சூழலைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் காங்கிரஸ் அல்லது வேறு ஏதெனும் ஒரு முஸ்லிம் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதன் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. நமது எதிர்ப்பை அரசாங்கத்திற்கு காட்டுவதுடன் சிறியதொரு அதிர்வை மட்டுமே உண்டுபண்ண முடியும். இதனால் ஆட்சியாளர்கள் இன்னும் கோபப்படலாம். 

ஒருவேளை, ஒருவர் கூட தவறவிடப்படாமல் அனைத்து முஸ்லிம் எம்.பி.க்களும் அலரிமாளிகைக்கு சென்று அழுத்தம் கொடுத்தால் ஏதாவது பலன் கிடைக்கலாம். அதைவிடுத்து ஒரிருவர் வெளியேறுவது மாற்றுக் கட்சிக்காரரின் செல்வாக்கை கூட்டி அவரை மேலும் அரசின் செல்லப் பிள்ளையாக்கிவிடும். ஆகவே, அரசிலிருந்து விலகுவது உசிதமானதல்ல என்ற உங்களது முடிவுடன் கொள்கையளவில் உடன்படலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியாயின் -  அரசாங்கத்துடன் இருந்ததன் மூலம் எதனையும் சாதிக்க முடியாவிட்டால் அதிலிருந்து விலகிவிடுவதில் ஒன்றும் பிரச்சினை இல்லைத்தானே என்ற ஒரு சாதாரண பொதுமகனின் நிலைப்பாட்டுடன் முஸ்லிம் தலைமைகள் உடன்பட வேண்டியிருக்கும். 
எனவே, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதோ வெளியில் இருப்பதோ இங்கு விவாதத்திற்குரிய விடயமல்ல. மாறாக, யார் குற்றினாலும் 'அரிசாக' வேண்டும். அது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல. முஸ்லிம் தலைமைகள் ஜனாதிபதிக்கு எவ்வளவு அழுத்தத்தை கொடுக்கின்றனவோ அதைவிட பெரிய அழுத்தத்தை அரசுடன் சங்கமமாகி இருக்கின்ற சிங்கள கடும்போக்கு அமைச்சர்கள் கொடுப்பார்கள் என்பதை தூக்கக் கலக்கத்திலும் மறந்துவிடக் கூடாது. 

அளுத்கம சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையிலுள்ள கிட்டத்தட்ட எல்லா தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலும் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. சிங்கள மக்களில் ஒரு தொகுதியினரும் இதனை கண்டிக்கின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமன்றி ஓரிரு சிங்கள அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுக்க பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தலைமைகளும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

அளுத்கமையில் மட்டுமல்ல – தெஹிவளை, பதுளை, குருணாகல், அம்பலாங்கொடை, கிரண்ட்பாஸ், மாவனல்லை, பாணந்துறை என்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற ஏகப்பட்ட பிரதேசங்களில் முஸ்லிம்களை சீண்டி விடுவதற்கான ஏற்பாடுகளை இனவாதிகள் ஏற்கனவே செய்துவிட்டிருக்கின்றார்கள். இனவாதத்தின் பலிபீடமாக மொத்த நாட்டையுமே இவர்கள் ஆக்கி விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது. 
எத்தனை போதி மரங்கள் முளைத்தாலும், எத்தனை போயா தினங்கள் வந்தாலும்.. சிலருக்கு ஞானம் கடைசி வரைக்கும் வரவேமாட்டாது.

No comments

Powered by Blogger.