மதங்கள் ம(மி)திக்கப்படும் நாட்டின் அரசன்...!
(நவாஸ் சௌபி)
அந்த நிலத்தில் நொறுங்கிக் கிடப்பது
இடித்து விழுந்த பள்ளிச் சுவரின் கற்கள் அல்ல
கலிமாவை மொழிந்த எங்களது கல்புகள்.
தொழுத பள்ளியின் இடிபாடுகள்
சுஜுது செய்த எமது முதுகின் மீது
சரிந்து விழுகிறது.
ஆட்சி புரியும் காவி அரசன்
எங்கள் தலைகளை மிதித்தபடி
அதன் மீது ஏறி நடக்கிறான்.
பள்ளியின் இடிபாடுகளுக்குள் சிக்கி
மூச்சுத் திணரி ஓலமிடும்
எமது சத்தம் கேட்காதபடி
அரசனின் காதுகள்
காவித் துணியால் இறுகக் கட்டப்பட்டிருக்கிறது.
கைகளில் கலிபா பட்டத்தை சுமந்து வந்த அரசன்
மண்ணில் சரிந்த பள்ளியின்
கோபுர உச்சியில் நின்று
இது மதங்களை ம(மி)திக்கும் நாடு என்று
பிரகடனம் செய்கிறான்.
அவனது காலடியில்
பள்ளியின் இடிபாடுகளுக்குள்
மையத்தாகிக் கிடக்கிறார்கள்
எங்கள் அரசியல்வாதிகள்.

Post a Comment