Header Ads



கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் SLMC இன் பலம் நிலைக்குமா..?

(Abu Shakeek)

நடைபெற்று முடிந்த மேல்மாகாண சபையின் கம்பஹ மாவட்ட தேர்தல் தொகுதியில் வெற்றியீட்டிய சகோதரர் ஷாஃபி ரஹீம் அவர்களுக்கு முதலில் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

கம்பஹ மாவட்டத் தொகுதியில் ஷாஃபி ரஹீம் அவர்கள் அவரது பலத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு வியூகத்தை கையாண்டு, இத்தேர்தலில் நான்காயிரத்துக்கும் மேலான விருப்பு வாக்குகளால் வெற்றி பெறும் பட்சத்தில் அவரது பதவிக் காலத்தில் இரண்டு வருடத்தை வழங்குவதாக பகிரங்கமாக வாக்களித்தமை நீங்கள் யாவரும் அறிவீர்கள். 

இன்று இந்நாட்டில் பெரும்பான்மைச் சமூகம் SLMCஐ அடியோடு அழிப்பதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டுவரும் இவ்வேளையில், கம்பஹ மாவட்ட SLMC வேட்பாளர்களில் (போராளிகளில்) சிலர் மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகளை உற்று அவதானிக்கையில் ஏதோவொரு அரசியல் பின்னணி இருப்பதை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. இவர்களும் அதற்குத் துணை போகுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளரால் உத்தியோக்பூர்வமாக வெளியிடப்ப்ட்ட அறிக்கையில் 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்டவரான சகோ. முஸ்தாக் மதனி (17) அவர்களின் வெற்றிவாய்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத சிலர், கம்பஹ மாவட்ட SLMC போராளிகள்(வேட்பாளர்கள்), ஆதரவாளர்களுக்குள் மறைமுகமாக சில கெட்ட அரசியல் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம். இது கட்சியைத் துண்டு துண்டாக உடைக்கும் நிலைமையை ஏற்படுத்தி விடலாம். கிழக்குக்கு வெளியில் தொடர்ந்தும் கம்பஹ மாவட்டத் தொகுதியில் SLMCஇன் பிரதிநிதியாக தொடர்ந்தும்(3வது முறையும்) சகோ.ஷாஃபி ரஹீம் தெரிவு செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே அவரது அரசியல் நோக்கு மிகவும் கூர்மையானதாக இருப்பதை உணர்த்துகிறது.

 ஆனால், இவ்விடயத்தில் அவர் மேற்கொள்ளப்போகும் முடிவுகள் நேர்மையாகவும் சரியாகவும் நீதியாகவும் அமையாவிட்டால், கம்பஹ மாவட்ட தேர்தல் தொகுதியின் SLMCஇன் பிரதிநிதி வாய்ப்பை எதிர்வரும் காலங்களில் தக்கவைத்துக் கொள்வது மிக மிக கஷ்டமானது என அரசியல் அறிவுடையோர், புத்திஜீவிகள், அவதானிகள் மற்றும் ஆதரவாளர்கள், போராளிகள், பிரதானமாக இளம் வாலிபர்கள் மத்தியில் பேசப்படுகின்ற விடயமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதை நாம் காணக்கூடியதாகவிருக்கின்றது.
கௌரவ ஷாஃபி ரஹீம் அவர்கள் வழங்கிய அவ்வுத்தரவாதத்தை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டும் அவரைச் சுற்றிய சில வேட்பாளர்களின் கெடுபிடிகளால் அவர் கொடுத்த வாக்கை மீறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாக சில உறுப்பினர்கள் விடும் ‘facebook, 1st alert’(திஹாரிய) செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்நிலைமையை கௌரவ ஷாஃபி ரஹீம் உட்பட தலைமைபீடம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் SLMC போராளிகள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கலகங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்பிரச்சினைகளை,சரியாகவும், பக்குவமாகவும், நிதானமாகவும், தூரநோக்குடனும், அணுகாவிட்டால், ஷாஃபி ரஹீம் அவர்களின் அரசியல் வாழ்வு சூனியமாகும் என்பதை அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இன்று கட்சியின் தலைமை பீடம், கிழக்கில் மேயர் பதவியை இழந்த ஷீராஸ் மீரா ஷாஹிபின் கட்சி மாறல் துரோகத்தனத்தை, சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில்,கிழக்குக்கு வெளியிலும், மேல் மாகாண கம்பஹ மாவட்டத் தொகுதியில் ஏற்பட்டிருக்கும் நிலைமையையும் தலைமை பீடம் கணக்கில் எடுக்காமல் இருக்க முடியாது. இது சம்பந்தமாக கட்சியின் தலைம் பீடம் எடுக்கும் முடிவைப் பொருத்தே, கட்சியின் பலம் ஓங்கும். தேர்தல் ஆணையாளரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட, SLMC இன் விருப்புவாக்குகள் கௌரவ ஷாஃபி ரஹீம் அவர்களுக்கு மட்டும் சரியானது என்றால், ஏன் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கும் நம்பர்:17 என்ற நபரின் தெரிவு வாக்குகளை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், பிழையானதாகவும், மீண்டும் Recount பண்ண வேண்டும் என்பதாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் கட்சி மூலம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதாகவும் சொல்கின்றனர். இதில் திரைக்குப் பின்னால் ஏதோவொரு சதியிருப்பது மிகவும் தெளிவாகப் புலப்படுகிறது. மேலும், சகோ.முஸ்தாக் மதனியின் தெரிவு வாக்குகள் மட்டும் பிழையானது  என்ற வாதம் மட்டுமே இன்று நாலா திசைகளிலும் பேசப்படுகின்ற ஒரு பிரதான விடயமாக இருப்பதை நாம் காண்கிறோம். இது மிகவும் கவலைக்குரியதும், கவனத்தில் எடுக்க வேண்டியதுமான ஒரு விடயமாக மாறியுள்ளது.

SLMC போராளி வேட்பாளர்களே! நீங்கள் மேடைகளில் மட்டும் சமூக உணர்வுடன் இஸ்லம் பற்றிப் பேசி வாக்குகளை அடையும் தந்திரோபாயங்களுக்கு அப்பால், நாம் முஸ்லிம்கள், நீதமாகவும் நேர்மையாகவும் அரசியல் நடவடிக்கைகளை இஸ்லாத்துடன் சரிபார்த்துக்கொள்பவர்களாகவும், அதன்படி நாம் செயல்படவும் வேண்டும். பதவி, அதிகாரம் தருபவன் இறைவன் என்பதை நாம் அடிப்படையாக மனதில்வைத்துகொள்ள கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
நீதி என்பதை இரண்டாகப் பிரித்தால் அதில் ஒன்று நாம் இம்மையில் செய்யும் செயல்களை வைத்து இது நீதி, அது அநீதி; இது சரி, அது பிழை; இதில் உரிய சாட்சிகள் காணப்படுகின்றன. எனவே வாதம், பிரதிவாதம் மூலம் பெறப்பட்ட தெளிவான சாட்சிகளின்படி நீதியரசர் தீர்ப்பளிப்பதுண்டு. 

இரண்டாவது நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் உண்மையான நீதி மறுமையில் மட்டுமே கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை மற்றும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவம் உள்ளவர்களாகவும் நல்ல தக்வா உள்ளவர்களாகவும் இவ்வுலகில் வாழ்ந்தோமேயானால், நாம் என்றும் வெற்றியாளர்களே.

இன்று எமது சமூகத்தில் அரசியல் செயல்பாடுகள் இஸ்லாத்துடன் தொடர்புடையதாக இல்லை என்றே கூறும் அளவுக்கு எமது அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் காணப்படுவது நாம் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். அதற்குக் காரணம் எமது அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய அரசியலுக்குப் பதிலாக இஸ்லாம் அல்லாத பேரின  சமூகத்தின் அரசியலைப் பின்பற்றி அவர்களின் பாசறையில் வளர்க்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். ஆகவே, எமது எதிர்கால அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய அரசியல் பாசறையில் வளர்க்கப்படுதல்வேண்டும்.அவர்களுக்கு தேவையான இஸ்லாமிய அரசியல் அறிவையும் அதற்கான பயிற்சிகளையும் இன்றுள்ள அரசியல் தலைவர்கள் வழங்க முன்வராத பட்சத்தில், குர்-ஆன், ஹதீஸ் இவற்றை முன்னிறுத்தி அரசியல் மேடைகளில் முழங்கும் பேச்சாளர்கள், இறைவனிடத்தில் மிகவும் பொறுப்பாளர்கள் மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்தை குர்-ஆன், ஹதீஸ் வழிகாட்டி என்ற பெயரில் எமது சமூகத்தை சுயநல அரசியல் இலாபத்துக்காக திசைதிருப்பிய பெரும் குற்றத்துக்கும், தண்டனைக்கும் உள்ளாகுவார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. 

இறைவன், இஸ்லாத்துக்கு முன் பல சமூகங்களைப் படைத்து அச்சமூகங்களை இஸ்லாமிய அரசியலினூடாக வழிகாட்டி பெரும் வெற்றிகளைக் கண்ட எமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகளை நாம் உறுதியாகப் பின்பற்றுபவர்களாக இருப்போமேயானால் வெற்றி, தோல்வி என்ற மனோபக்குவம் தானாக வரும். இஸ்லாமிய அரசியல் வரலாறுகளை நாம் தேடிப்படித்தோமேயானால் வெற்றி தோல்வி என்பது அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும். மாறாக, தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை ஷைத்தானின் செயலாகும் என்பதை தெளிவாகப் புரிய வேண்டும் ; ஏற்க வேண்டும்.

இந்த கம்பஹ மாவட்டத் தேர்தல் தொகுதியில் SLMCஇன் விருப்பு வாக்குகளைப் பெற்று ஷாஃபி ரஹீம் முதலிடத்தையும் 2வது இடத்தை நம்பர் 17 என்ற நபர் பெறாதிருந்தால், இன்று சில வேட்பாளர்கள் மட்டுமே ஷாஃபி ரஹீமுடன் அவரது வெற்றியைக் கொண்டாடியிருப்பர். மாறாக, No.17 என்ற நபர் 4380 விருப்பு வாக்குகளைப் பெற்று, இரண்டு வருட கால slmcஇன் கம்பஹ மாவட்ட உறுப்பினராக செயல்படப்போவதை ஜீரணித்துக்கொள்ள முடியாத, சில வேட்பாளர்களின் செயற்பாடுகளே இன்று பூகம்பமாக வெளிவந்துகொண்டிருப்பதை பொதுமக்கள் அறியாமலில்லை. தயவு செய்து போராளிகள், ஆதரவாளர்கள் குறிப்பாக கஹடோவிட, மள்வானை, திஹாரிய ஆதரவாளர்கள் இது பற்றி அதிருப்தியடைய வேண்டாம். இறைவனின் உதவியால் நிச்சயம் என்றும் உண்மை வெல்லும். ஏதும் சூழ்ச்சிகள் திரைக்குப் பின்னால் நடக்க வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறு ஏதும் நடந்தால் மறுமையில் ஷாஃபி ரஹீம் உட்பட தலைமைப் பீடம் பொறுப்புச் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் சந்தெகமில்லை.

ஆகவே, எமது ஆதரவாளர்கள் யாவரும் சந்திசிரிக்கும் படி, நடந்து கொள்ள வேண்டாம். அனைத்தும் அல்லாஹ்வின் நாட்ட்ப்படியே  நடக்கும் அல்ஹம்துலில்லாஹ்!!

SLMC குர்-ஆன், ஹதீஸை முன்வைத்து மேடையில் பேசுவதோடு மட்டும் நின்றுவிடாது இஸ்லாமிய அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களாக செயல்படவும் வேண்டும். எமது அனைத்து செயல்பாடுகளும் குர்-ஆன், ஹதீஸை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டுமே தவிர, அந்நியர்கள் அரசியல் மேடைகளில் வழங்குகின்ற வாக்குறுதிகளுக்கும் எமக்கும் வித்தியாசம் வேண்டும். எமது சமூகத்தில் இன்று நிலவும் அரசியல் நிலமை அவ்வாறாகவே காணப்படுகிறது.

மர்ரூம் அஷ்ரஃப் அவர்களுக்குப் பிறகு, எமது அரசியல் தலைவர்களுள் பலர் பொது மக்களை ஏமாற்றி வயிறு பிழைக்கும் தலைவர்களாகவே இருக்கின்றனர். மாறாக, இஸ்லாமிய அரசியல் பாசறையில் வளர்க்கப்பட்டவர்களாக எமது தலைவர்களின் செயற்பாட்டைக் காண முடியாதது, பெரும் கவலைக்குரியது.SLMC உட்பட அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இஸ்லாமிய அரசியலை செயல்படுத்தக்  கூடியவர்களாக திகழ வேண்டும். எமது தலைவர்கள் இஸ்லாமிய அரசியல் அறிவு போதாமையினல், அவர்களது அறிக்கைகளிலும், மேடைப் பேச்சுக்களிலும் சிக்குண்டு பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகின்றனர். எமது அரசியல் தலைவர்களில் சிலர் தாம் விடும் அறிக்கைகள், பேசுகின்ற மேடைப்பேச்சுக்களிலும் இஸ்லாம் விரும்பாத நீதிக்கும் மாற்றமான விடயங்களைக் கையாள்கின்றனர். இவர்கள் இதன் பாரதூரம் தெரியாது, நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை அறிந்தும், இது அரசியல் தானே என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இந்த அந்நிய அரசியல் நடைமுறை முஸ்லிம்களாகிய நீங்கள்(அரசியல் தலைவர்கள்) மாற்றிக் கொள்ளாவிட்டால், எமது இளம் வாலிப எதிர்காலத் தலைவர்கள் அரசியலை ஓரம்கட்டி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை கட்டிக் காக்க முடியாமல் போகும் என்பது தெளிவு. இன்று முஸ்லிம் சமூகத்திலுள்ள அனேகர் அரசியல் ஒரு சாக்கடை என்ற பாணியில் எமது சமூகத்தின் அரசியல் செல்வாக்கும் ஆதரவும் குறைந்து கொண்டு போவதை இஸ்லாமிய அரசியல் ஆதரவாளர்களின் கணிப்பீடாகும். SLMC இன் வரலாற்றில், கிழக்கு மாகாண உறுப்பினர்களில் சிலர் கட்சி விட்டு கட்சி  மறிக்கொண்டிருப்பவர்களாகவே, அவர்களின் வரலாறு பதியும். ஆனால், இன்று அந்நிலைமை கிழக்குக்கு வெளியிலும் ஏற்படுவதற்கான சதித்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது மிகக் கவலைக்குரியது.

கிழக்குக்கு வெளியில் மேல் மாகாணத்தில் முதன்முதலாக SLMCஇனூடாக மர்ஹூம் அனீஸ் ஷரீஃப் அவர்கள் தெரிவானார். அதன் பின் தொடர்ச்சியாக மூன்றாவது முறையும் சகோ.ஷாஃபி ரஹீம் முதலாவது இடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை கட்சிக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும். எனினும், அவர் கொடுத்த வாக்கு மீறப்படும் பட்சத்தில் கம்பஹ மாவட்டத்தில் கட்சியின் ஆதரவில் பாரிய வீழ்ச்சி ஏற்படப் போவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கௌரவ ஷாஃபி ரஹீம் இந்த அனைத்து விடயங்களையும் சமாளித்து மேற்கொள்ளப்போகும் முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments

Powered by Blogger.