Header Ads



பேஸ்புக்கில் வயதை மறைத்தவர் சுட்டுக்கொலை

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வயதை மறைத்த பேஸ்புக் காதலியை காதலன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வினித் குமார் (வயது 24) மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதி கோரியை பேஸ்புக் மூலம் காதலித்துள்ளார். ஜோதி கோரி (வயது 44) தன் வயதை மறைத்து காதலித்ததால் ஆத்திரமடைந்த வினித் குமார் காதலியைச் சுட்டுக் கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, உயிருக்கு போராடிய  நிலையில் கிடந்துள்ளார். அவர் அருகே நடுத்தர வயது பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

குறித்த இளைஞன் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழப்பதற்கு முன்பதாக அளித்த வாக்குமூலத்தில் ‘எனது பேஸ்புக் காதலிக்கு 44 வயது. மணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இருவரினதும் பேஸ்புக் கணக்குகள் மூலம் மேலதிக தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜோதி தனது வயது 22 என பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார், எனினும் வினித்திற்கு உண்மையான வயது தெரியவந்தமை கொலைக்கான காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 2 வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் உருவான நட்பு காதலாக மாறியது. ஜோதியை நேரில் சந்திக்க விரும்பிய வினித், கடந்த புதன்கிழமை ஜபல்பூர் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை காலை ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜோதிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.

இருவரும் பேடாகாட்டின் மலை உச்சியில் சந்தித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் தன்னிடம் இருந்த துப்பாக்கி மூலம் வினித் ஜோதியை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

ஜோதிக்கு அவரது கணவருடன் பிரச்சினை எதுவும் இல்லையெனவும், ஜோதிக்கு வீட்டில் பயன்படுத்த அவரது கணவர் மடிக் கணனி ஒன்றை பரிசளித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.