சமூக நெறிப்படுத்தலில் பங்கு கொள்ளுமாறு ஊடகத் துறையினருக்கு பகிரங்க அழைப்பு
முஸ்லிம் சமூகம் தற்போது பல்வேறு துறைகளில் நெருக்கடி நிலமைகளை எதிர் நோக்கி வருகின்றது. இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப செயலாற்றாது தமது தனிப்பட்ட நலன்களை-பதவிகளை முன்னிருத்திய நிழ்ச்சி நிரலுக்கு ஏற்ப காரியம் பார்த்து வருவதால் அவர்கள் விடயத்தில் முஸ்லிம் சமூகம் தற்போது நம்பிக்கையிழந்து நிற்கின்றது.
சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்கள் மத்தியில் ஷPயா_ - சுன்னி இரத்தக்களரிகள் என்ற நிலையில், இங்கு இயக்க அமைப்புக்களை முதன்மைப்படுத்தும் நோக்கிலான சமயக் குழுக்களின் செயல்பாடுகளினால் கிராமங்கள், வீதிகள்-ஒழுங்கைகள் தோறும் முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு இடங்களில் முறுகள் நிலை அதிகரித்து பள்ளிவாயல்களுக்கு உள்லேயும் வெளியேயும் மோதல் என்ற நிலை பல இடங்களில் அவதானிக்க முடிகின்றன.
குறுகிய பிரதேசவாத மேலாதிக்கம் தொடர்பான போட்டிகள் மற்றும் இன்னோரன்ன சில்லரைப் பிரச்சினைகள் காரணமாகவும் முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகள் தோன்றி இருக்கின்றன. இதனால் சமூகத்தின் தேசிய மட்ட தேவைகள், நலன்கள் தொடர்பான கவனம் திசை திருப்பப்பட்டு வருகின்றது. இந்தப் பின்னணியில் பல்வேறு துறைகளில் தற்போது சமூகத்தின் முன்னேற்றம் தடைப்பட்டு அடுத்த சமூகங்களுடன் தாக்குப் பிடிக்க முடியாத ஏமாளி சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறி இருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் நமது சமூகத்தின் பிழையான அணுகுமுறைகள் காரணமாக அன்னிய சமூகத்தின் மத்தியில் எமக்குத் தலை குணிவும் முறுகள் நிலைகளும் கூட கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்திருக்கின்றன.
இந்த விடயங்களை சமூக மயப்படுத்தி சகல துறைகளிலும் சமூகத்தைக் கட்டுக்கோப்பாக நெறிப்படுத்துவதில் ஊடகவியலாளர்கள் அமைப்பு ரீதியில் ஐக்கியப்பட்டு பாரிய பங்களிப்பையும் தலைமைத்துவத்தையும் கொடுக்க முடியும் என்று குறிப்பிடுகின்றார் இந்த உத்தேச அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நஜீப் பின் கபூர். அத்துடன் எந்தவொரு அமைப்பிற்கும் போட்டிக்காகவோ சவாலுக்காகவோ இவ்வமைப்பு உருவாக்கப்படவில்லை. இந்த அமைப்பின் நோக்கங்களும் செயல்பாடுகளும் முற்றிலும் வித்தியாசமானதாக அமையும். ஏனைய சகோதர ஊடக அமைப்புக்களுடனும், பிராந்திய ஊடகவியலாளர் அமைப்புக்களுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்தி நமது மேற் சொன்ன நோக்கங்களுக்கான ஒத்துழைப்புக்களையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்கின்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அமைப்பின் அடுத்த கலந்துறையாடல் புத்தளத்தில் விரைவில் நடைபெற இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
எனவே சமூக நலன்களையும் ஊடகவியலாளர்களின் நலன்களையும் மையமாகக் கொண்ட சமூக நோக்குடனான ஊடக அமைப்பொன்று விரைவில் தோற்றுவிக்கப்பட இருக்கின்றது. இது தொடர்பாக பிரதேச, மாவட்ட மட்டத்தில் கருத்தரங்குகள் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றது. மேற்படி நோக்கங்களை புரிந்து-ஏற்று இந்த அமைப்பில் இணைந்து சமூகப் பணிபுரிய நாடுகின்ற முஸ்லிம் ஊடகவியலாளர்களும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களும் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் 0777275758 அல்லது L.A.U.L.M.NALEER. 129/2/6, D.S.SENANAYAKE STREET, KANDY என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

Post a Comment