ரியாத், ரவ்ழா தஃவா நிலையத்தில், மாற்றுமத தமிழ் சகோதரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி (படங்கள்)
(ரியாதிலிருந்து அபூ ஸஃத்)
புனிதமிகு சத்திய மார்க்கம் இஸ்லாம் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ரவ்ழா தஃவா நிலையம் சென்ற ரமழான் மாதத்தில் ரியாதில் வசிக்கும் மாற்று மத தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் ''அன்புள்ள அம்மா'' என்ற நூலில் ஓர் போட்டியை நடாத்தியது. சுமார் 3000 பேர்களுக்கு மத்தியில் இப்போட்டிக்குரிய புத்தகமும், வினாப் பத்திரமும் விநியோகிக்கப்பட்டது. பணிப்பெண்கள் சிலரும், நிறுவனங்களில் தொழில் புரிவோர் மற்றும் சாரதிகளாகப் பணிபுரியும் பல ஆண்களும் விடைகளை எழுதி அனுப்பியிருந்தனர். போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று (01.11.2013) மாலை நடைபெற்றது. கூடிய புள்ளிகளைப் பெற்றவர்களின் அடிப்படையில் 700 ரியால்கள் முதல் 100 ரியால்கள் வரை பலர் பரிசுகளைப் பெற்றனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு இலங்கையிலுள்ள ஹாமிய்யா அரபுக் கலாசாலையின் ஆசிரியர் அஷ்ஷைக் அப்துல் ஜலீல் அப்துல் கபூர் (மதனி) அவர்கள் ''இஸ்லாம் பற்றி ஏனைய மதங்கள் குறிப்பிடுவது என்ன?'' என்ற தலைப்பில் ஓர் உரை நிகழ்த்தினார். அவர் தமதுரையில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் முழு மனித சமுதாயத்துக்கும் பயனளிக்கக் கூடியவையே எனவும், மாற்று மத புராதண நூற்களில் இஸ்லாமிய கடவுட் கொள்கை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் ஹஜ் கடமையை முடித்துவிட்டு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு ரியாத் நகருக்கு சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது உரையை அடுத்து தஃவா நிலையத்தின் தலைவர் அஷ்ஷைக் ஸாலிஹ் அத்துலைக்கான் அவர்கள் பரிசில்களை வழங்கி வைத்தார். முதல் பரிசான 700 ரியால்களை (25000 ரூபா) சகோதரர் அமின் பெற்றுக்கொண்டார்.
பரிசளிப்பை அடுத்து தஃவா நிலையத்தின் அழைப்பாளர் அஷ்ஷைக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) அவர்கள் ''இவ்வுலகத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் ஓரே இறைவன் அல்லாஹ்வே எனும் கருப்பொருளில் அறிவுபூர்வமான பல்வேறு உதாரணங்களை எடுத்துக்கூறி ஓர் சிற்றுரை நிகழ்த்தினார்.
அதனை அடுத்து ''சத்திய மார்க்கம்'' ''இஸ்லாம் பற்றிய விளக்கம்'' எனும் நூற்கள் விநியோகிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. நாம் அடைந்த சத்திய இஸ்லாத்தை மாற்று மதத்தினருக்கு எத்தி வைப்பதில் ஒவ்வொரும் பங்களிப்புச் செய்வோமாக.



Post a Comment