முஷரப், பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓட முடியாது
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப். கடந்த தேர்தலுக்கு பிறகு நாடு கடத்தப்பட்ட அவர் லண்டன் மற்றும் துபாயில் தஞ்சம் அடைந்திருந்தார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பினார்.
ஆனால், அவரால் போட்டியிட முடியவில்லை. முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, பலுசிஸ்தான் பழங்குடியின தலைவர் புக்டி கொலை வழக்கு, நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 2 வழக்குகளில் இவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் புக்டி கொலை வழக்கிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி மீண்டும் துபாயில் தங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால் இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தவுடன் கடந்த 2007–ம் ஆண்டு இஸ்லாமாபாத் ரெட் மசூதியில் நடந்த ராணுவ நடவடிக்கையில் அப்துல்ரஷீத் ஹாஷி என்ற மதகுரு கொலை செய்யப்பட்ட வழக்கில் முஷரப் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரிநசீர் அலிகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வெளிநாடு செல்பவர்கள் கட்டுப்பாடு பட்டியலில் முன்னாள் அதிபர் முஷரப் பெயர் உள்ளது. அவர் மீது கோர்ட்டில் பல வழக்குகள் உள்ளன. எனவே அவர் பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓட முடியாது.
சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தால் மட்டுமே அவர் வெளிநாடு செல்ல முடியும் என்றார்.

Post a Comment