நோன்பின் சட்டங்கள்..!
(A.J.M மக்தூம்)
1. நோன்பு கடமையாவதற்குரிய நிபந்தனைகள்
1) முஸ்லிமாக இருத்தல், 2) பகுத்தரிவுள்ளவனாக இருத்தல், 3) பருவமடைந்திருத்தல், 4) பிரயாண த்தில் இல்லாதிருத்தல், 5) நோன்பு நோற்க சக்தி பெற்றிருத்தல், 6) மாதவிடாய், பிரசவ இரத்தப் போக்கு போன்றவற்றிலிருந்து நீங்கியிருத்தல்.
2. நோன்பின் கடமைகள்:
1) ஒவ்வொரு இரவிலும் (fபஜ்ருக்கு முன்) நோன்பு நோற்பதாக உள்ளத்தில் எண்ணம் கொள்ளல், 2) fபஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் மறையும் (மக்ரிப்) வரை நோன்பை முறிக்கும் காரியங்களிலிருந்து விலகி இருத்தல்.
3. நோன்பை முறிக்கும் காரியங்கள்:
உண்ணுதல், பருகுதல், ஊட்டச் சக்தியுள்ள ஊசி ஏற்றுதல், வேண்டுமென்றே வாந்தி எடுத்தல், உடலுறவு கொள்ளல், மனைவியரை கட்டியணைத்தல், முத்தமிடல் போன்ற சுய செயற்பாடுகளினால் ஸ்கலிதம் அடைதல், மாதவிடாய், பிரசவ இரத்தப் போக்கு ஏற்படல்.
4. நோன்பை விடுவதற்குரிய பயணத்திற்கான எந்த வரையறையும் இல்லை என்பதே சரியான கருத்தாகும். பாவமான செயலுக்காக பயணம் செல்லாமல் இருக்கும் வரை பொதுவாக எந்த பயணத்திலும் நோன்பை விட அனுமதியுள்ளது. பயணத்தில் நோன்பு நோற்கும் போது எந்த சிரமமும் இல்லை என்றால் நோன்பு நோற்பதே சிறந்தது, நோன்பு நோற்பது சிரமமாக இருந்தால் நோன்பை விடுவது சிறந்தது, நோன்பு நோற்பதால் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் நோன்பை விடுவது கட்டாயமாகி விடும். எப்படியோ அந்த நோன்பை கழா செய்திட வேண்டும்.
5. தனது நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ள நோயாளி, நோன்பு நோற்பதால் அவருக்கு எந்த சிரமமும் இல்லை என்றால் நோன்பை நோற்பது கடமையாகும். அவருக்கு சிரமமாக இருந்தால் நோன்பை விடுவது நல்லது; சிரமத்துடன் நோன்பு நோற்பது விரும்பத் தகாததாகும். நோன்பினால் அவருக்கு ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றால் நோன்பு நோற்காது இருப்பது கடமையாகும். பின்பு அந்த நோன்பை கழா செய்திட வேண்டும்.
6. வயோதிபம், நோய் போன்றவற்றின் காரணமாக இனி எப்போதும் நோன்பு நோற்க சக்தி பெற வாய்ப்பில்லா தோர், ஒவ்வொரு நாள் நோன்புக்காகவும் ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். உணவாக சமைத்தோ, தானியங்களாகவோ கொடுக்கலாம். வயிறு நிரம்பும் அளவுக்கான உணவை அளித்திடுவதே அவசியம். சில அறிஞர்கள் அதன் அளவை வரையறுத்தும் கூறியுள்ளனர்.
7. பருவ வயதை அடையாத குழந்தைகள், வயோதிபம், பைத்தியம் போன்றவற்றின் மூலம் பகுத்தறிவை இழந்தவர்கள் போன்றோரின் மீது நோன்பு கடமையில்லை.
8. மாதவிடாய் மற்றும் பிரசவ உதிரப் போக்கு ஏற் பட்டுள்ள பெண்கள் நோன்பு நோற்பது கூடாது, அது அங்கீகரிக்கப் பாடவும் மாட்டாது. நோன்பு நோற்றி ருக்கும் வேளையில் உதிரம் வெளியானால் அந்த நோன்பு பாதிளாகி விடும். அவர்கள் அக்காலப் பகுதியில் விட்ட நோன்புகளை கணக்கிட்டு பிறகு கழா செய்து கொள்ள வேண்டும்.
9. கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் நோன்பு நோற்பதால் தனக்கோ, குழந்தைக்கோ பாதிப்புக்கள் ஏற்படும் என்றிருந்தால், நோயாளிகளைப் போன்று அந்நிலையில் நோன்பு நோற்காது பிறகு அதனை கழா செய்து கொள்ள வேண்டும்.
10. பாரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டணை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டு உடல் தெம்பு பெற்றால் தான் முடியுமாக இருந்தால் அச்சந்தர்ப்பத்தில் நோன்பை விட அனுமதியுள்ளது.
11. எப்போது மரணம் வரும் என்று யாரும் அறியாததினால் நோன்பை விட்டவர்கள் முடியுமான அளவு அவசரமாக கழா செய்து கொள்வது அவசியமாகும்.
12. தூக்கத்தில் ஸ்கலிதம் அடைதல் அல்லது மறந்த நிலையில் உணவு, பானங்களை உட்கொள்வதன் மூலம் நோன்பு முறியாது. ஞாபகம் வந்த உடன் அதனை உட்கொள்வதை தவிர்த்து கொள்வது அவசியமாகும்.
13. குளித்தல், பல் துலக்கல், வாய் கொப்பளித்தல், நாசிக்குத் தண்ணீர் செலுத்தல், மறுத்துவ நோக்கம் கருதி உணவாக அமையாத ஊசி போட்டுக் கொள்வது, கண், மூக்கில் சொட்டு மருந்து இடுவது, ஆஸ்மா நோயாளிகள் போன்றோர் ஸ்ப்ரே பயன்படுத்துவது, மூக்கிலிருந்து அல்லது காயங்களினால் இரத்தம் வடிதல், வாசனைத் திரவியங்களைப் பயன் படுத்துவது, அவற்றை நுகர்வது போன்றவை மூலம் நோன்பு முறியாது.
14. இரத்தம் குத்தி எடுத்தல் மூலம் நோன்பு முறியாது என்பதே அதிகமான அறிஞர்களின் நிலைப்பாடாகும்; ஆரம்பத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுப்பதின் மூலம் நோன்பு முறிந்து விடும் என்று கூறியிருந்த போதும் பிறகு அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பதை உறுதியான செய்திகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம். எனினும் இரத்தம் குத்தி எடுத்தல், பிறருக்கு இரத்தம் கொடுத்தல் ஆகிய செயற்பாடுகளினால் உடல் பலவீனம் அடைந்து நோன்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதனால், நோன்பின் பகற்காலங்களில் நிர்பந்தமின்றியே தவிர அவற்றை தவிர்ந்து கொள்வது சிறந்தது. (அல்லாஹ்வே நன்கறிந்தவன்)

Post a Comment