Header Ads



கிழக்கு மாகாண சபையில் '13' ஐ ஆதரித்து பிரேரணை - மு.கா. சமர்ப்பிக்கிறது

அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எதிர்த்தும் 13ஆவது திருத்த சட்டத்தை ஆதரித்தும் நாளை 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் கிழக்கு மாகாணசபை குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்த சட்டத்தை அரசமைப்பில் இருந்து நீக்கி விடுவதற்கோ அதன் அதிகார வலுவை குறைப்பதற்கோ முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இணங்க மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனிநபர் பிரேரனை பத்திரம்

அதேவேளை தனது தனிநபர் பிரேரனையை 23.07.2013 செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் சபை நிகழ்ச்சி நிரலில் அவசர பிரேரணையாக சேர்த்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபை பேரவைச் செயலாளரிடம் கோரியுள்ளார்.

பேரவைச் செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள தனிநபர் பிரேரனை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"மாகாண சபை முறைமையானது இலங்கை மக்களுக்கு தங்களது மாகாணரீதியான தேவைகளினை அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்வதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் மாநாட்டின் உள்ளக அறிக்கையினை தொடர்ந்து 10.05.2008 ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல் மூலம்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் கிழக்கு மாகாணசபை முதன் முறையாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம், சிங்கள இன மக்கள் இரண்டு (2) தடவைகள் தங்களது பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தெரிவுசெய்து கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பியுள்ளனர். கிழக்கு மாகாண சபைக்கு தமிழ், முஸ்லிம், சிங்கள இன பிரதிநிதிகள் தெரிவுசெய்யபட்டதுடன் முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

மாகாண சபையானது எப்போதும் இந்த நாட்டின் அதிகாரத்தினையும், இறைமையையும் பேணி பாதுகாத்துள்ளதுடன் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தில் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரம் மக்களுக்கு மாகாணரீதியாக தங்களது தேவைகளினை இனம் கண்டு தாங்களே அதற்குரிய தீர்வையும் கண்டு கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டதானது வரவேற்கத்தக்கது என மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே கிழக்கு மாகாணசபைக்கான அங்குரார்ப்பண நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் மாநாட்டின் இடைக்கால அறிக்கை  ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டு ஜனாதிபதி அவர்கள் 13 வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என கோரியதுடன் அதன் ஒரு உள்ளகமுயற்சியாக சம்பந்தப்பட்ட அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கியதாக ஒரு இறுதித்தீர்வு எட்டும்வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 13வது திருத்தம் சாத்தியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த சபையானது 13 வது திருத்தத்தினை யாப்பில் இருந்து நீக்கிவிடுவதற்கோ அல்லது அதிகாரங்களினை குறைத்து விடுவதற்கோ எந்த விதத்திலும் அனுமதியோ ஆதரவோ வழங்கக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன் 13 வது சட்டத்திருத்தத்தினை பாதுகாப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் இந்த சபை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. Akkaraipttu அரசியல்வாதி நண்பன் உதுமானுக்கு சொல்ல விரும்புவது என்ன .

    ReplyDelete
  2. 'திவிநெகும' பாவத்திற்கு இதன் மூலமாவது பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுங்கள்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.