Header Ads



'மஹிந்த ராஜபக்ஸவும், மணப் பெண்ணின் அப்பாவும்'

ஒரு பெண்ணை ஆணுக்கு திருமண பொருத்தம் பார்த்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே தேனிலவுக்கு சென்ற பின்னர் மீண்டும் பொருத்தம் பார்க்க வேண்டும் என மணப் பெண்ணின் அப்பா கூறுவதுபோலவே மஹிந்த ராஜபக்ஷவின் செயல் 13 ஆம் திருத்தம் தொடர்பில் உள்ளது. இது மிக வேடிக்கையான முட்டாள்தனமான செயலாகும் என நவசமசமாஜயக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

கொழும்பு, பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அஸாத் சாலி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பினர் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசியதாவது,

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்பத்துவோம் என்றும் 13 பிளஸ் வழங்குவேன் என்றும் சர்வதேசத்திடம் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இன்று 13 பிளஸ் என்றால் என்ன? நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை என்றால் என்ன? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடகம் ஆடுகிறார். அவரைப்போல் நடிகர் யாருமே இருக்க முடியாது.

இந்தியா உள்நாட்டு பிரச்சினையில் தலையீடு செய்யக்கூடாது என கூறுகிறார்களே, உண்மையில் அப்பிரச்சினையில் இந்தியா தலையிடாமல் வேறு யார் தலையீடு செய்வார்கள்? இந்தியாவில் 80 வீதம் இந்துக்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் உள்ளனர். அந்த மக்கள் இந்த நாட்டில் அநீதியாக நடத்தப்பட்டால் இந்தியா தலையீடு செய்யும், செய்யத்தான் வேண்டும்.

13 ஆவது திருத்தம் என்பது உண்மையில் இந்தியாவினால் இங்கு கொண்டு வரப்பட்டதல்ல, அது வட்ட மேசை மாநாட்டின்போதே முன்வைக்கப்பட்ட ஒரு அம்சம், அது தமிழ்- சிங்கள தலைமைகளின் பேச்சுவார்த்தை மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு இணக்கம்,  13 ஆவது திருத்தம் இந்த நாட்டுக்கு தேவையான ஒன்று, அதனை இல்லாது செய்ய முயற்சிப்பது அநீதியான துரோக செயல் என்பதை அரசாங்கமும் அரசில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகளும் உணர வேண்டும்.

ஒரு பெண்ணை ஆணுக்கு திருமண பொருத்தம் பார்த்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே தேனிலவுக்கு சென்ற பின்னர் மீண்டும் பொருத்தம் பார்க்க வேண்டும் என மணப் பெண்ணின் அப்பா கூறுவதுபோலவே மஹிந்த ராஜபக்ஷவின் செயல் 13 ஆம் திருத்தம் தொடர்பில் உள்ளது. இது மிக வேடிக்கையான முட்டாள்தனமான செயலாகும், எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.