பால் அம்மா...!
(அஸாத் எம் ஹனிபா)
'கிரி' அம்மா என்று தான்
அவர்கள் உன்னை
அழைக்கிறார்கள்
எத்தனையோ
எமது அம்மாக்களை
சும்மாக்கள் என்று
சுட்டுத் தள்ளியவர்கள்
'கிரி' அம்மாவின்
முலையில் வாய் வைத்து
தாய்ப் பால் குடித்ததாய்க் கூறி
தமக்குத் தாமே
தீ மூட்டிக் கொள்கிறார்கள்
இந்த தர்ம இராஜ்யத்தில்
எமக்கு
ஆகுமாக்கப்பட்டதைக் கூட
இனி ஆக்கித் தின்ன முடியாது
இங்கே
ஹலாலான
கசாப்புக் கடைகள்
வைத்திருப்பவர்கள் எல்லாம்
'கலிமாச்' சொன்னவர்கள் என்பது
தினமும்
பன்றி இறைச்சியை மதுவில்
தொட்டுப் புசிப்பவர்களுக்கு
நன்கு தெரியும்
பூச்சி புழுக்களுக்கு கூட
காப்பி தண்ணி கொடுத்து
பிரியாணி பகிர்ந்தளிக்கும்
எம்மவரின் வரலாற்றை
அவர்களுக்கு
ஒரு முறை புரட்டிக் காட்டுங்கள்
தெரு நாயொன்றின்
தாகம் தீர்த்த தேவடியாள்
சுவர்க்கம் போனதை
புரிந்து கொள்ளட்டும் !
ஆனால்
இந்த
புண்ணாக்கு மாடுகளுக்கு
தெரியாத ஒரு விடயம்
இங்கே உள்ளது
முட்டுக்கொடுக்க
எம்மை மொத்தமாய் விற்று
சோரம் போனவர்களின்
வெள்ளைத் தொப்பிகள்
சூழச் சுழல
எம் கழுத்தின் மீதான
பேரினவாத கோரப்பிடியின்
அழுத்தங்கள்
கூடிக் கூடிச் செல்கின்றன !

நல்ல கவிதை. கவிஞருக்கு எனது பாராட்டுக்கள்!
ReplyDelete