Header Ads



அமெரிக்க விமான நிலையத்தில் இலங்கை அமைச்சருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி


மியாமி விமான நிலையம் வழியாக வெனிசுலா செல்ல முயன்ற சிறிலங்கா அமைச்சர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடாவில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்த சிறிலங்கா அமைச்சர் ஒருவருக்கு, வெனிசுலா தலைநகர் கராகஸ் செல்லும் படி கொழும்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. 

வெனிசுலா அதிபராக நிக்கலஸ் மடுரோ பதவியேற்கும் நிகழ்வில் சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக பங்கேற்கும்படி அவர் அறிவுறுத்தப்பட்டிருந்தார். 

வெனிசுலா அதிபர் சாவேசின் மரணத்தை அடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் இவர் அதிபராகத் தெரிவாகியிருந்தார். 

கோர்ட், ரையுடன் சிறிலங்கா அமைச்சர் விமானத்தைப் பிடிக்க மியாமி அனைத்துலக விமான நிலையம் சென்றார். 

அவரிடம் நுழைவிசைவு ஏதும் இருக்கவில்லை, நியுயோர்க்கில் உள்ள ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தினால் வழங்கப்பட்ட கடிதம் மாத்திரமே இருந்தது. 

விமான நிலையத்தில் இருந்த அமெரிக்க அதிகாரிகள், முறையான நுழைவிசைவு இல்லாமல், விமானத்தில் ஏற சிறிலங்கா அமைச்சரை அனுமதிக்க மறுத்து விட்டனர். 

வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நிக்கலஸ் மடுரோவின் வெற்றியை அமெரிக்கா ஏற்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். 

அமெரிக்காவின் இந்த இராஜதந்திரம் தனக்குத் தெரியும் என்று சிறிலங்கா அமைச்சர் அமெரிக்க அதிகாரிகளுடன் வாக்குவாதப்பட, விமான நிலையத்தில் இருந்த பெருமளவானோர் அதைப் பார்க்க கூடிவிட்டனர். 

இதனால், சங்கடப்பட்ட சிறிலங்கா அமைச்சர், வெனிசுலா செல்லும் திட்டத்தைக் கைவிட்டு மீண்டும் புளோரிடாவில் விடுமுறையைக் கழிக்கச் சென்று விட்டார். 

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

2 comments:

Powered by Blogger.