Header Ads



காத்தான்குடி மையவாடிகள் யாரின் சொத்து..?


அஸ்ஸலாமு அலைக்கும்,

பள்ளிவாயல்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களால் பேணிப்பாதுகாக்கப்பட்டு கண்ணியத்தோடு நடாத்தப்படுகின்ற ஒரு இடமாக மையவாடிகளே காணப்படுகின்றன. எல்லா மதத்தவர்களும் தங்களது அடக்கஸ்தலங்களை  பேணிப் பாதுகாப்பதில் ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். ஆனால் காத்தான்குடியில் மையவாடிகளின் நிலமையானது வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது.

காத்தான்குடியில் உள்ள பிரதான ஜும்ஆ பள்ளிவாயல்களின் நிருவாகங்கள், மையவாடிகளில் வியாபார ஸ்தலங்களை அமைத்து குத்தகைக்கு வழங்கியும், சமூக சேவை நிறுவனத்தின் காரியாலத்தையும், அரசாங்க அலுவலகங்களையும் அமைப்பதற்கு மையவாடிகளை வழங்கியும் துஷ்பிரயோகம் செய்து வருகின்றன.

வருமானத்தை நோக்கமாகக் கொண்டு, உலகில் முதன் முதலாக மையவாடிகளில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டதென்றால் அது காத்தான்குடியில் மட்டும்தான். இவ்வாறு காத்தான்குடியில் மையவாடிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது போல் உலகின் எந்த பாகத்திலும் நடந்ததாக ஒரு சம்பவத்தைக்கூட எம்மால் பார்க்க முடியவில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையானது இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதில் மற்றுமோர் கவலையான விடயம் என்னவென்றால், உலமாக்களும், இஸ்லாமிய, மற்றும் சமூக சேவை அமைப்புகளும் இதை தடுத்து நிறுத்தாமலும், எந்தவிதமான எதிர்ப்புகளை தெரிவிக்காமலும் பார்த்துக் கொண்டு இருப்பதுதான்.

காத்தான்குடியிலுள்ள மொத்த மையவாடிகளின் நிலப்பரப்பின் அளவு 2493 பேச்சஸ்(Perches). இதுகாலவரை கட்டிடங்கள் கட்டுவதற்க்காக உபயோகப்படுத்தப்பட்ட மையவாடிகளின் நிலப்பரப்பின் அளவு 452 பேச்சஸ்(Perches). எதிர்காலத்தில் வியாபார ஸ்தலங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற மையவாடிகளின் நிலப்பரப்பின் அளவு 338 பேச்சஸ்(Perches). ஆனால் மையவாடிகளை முற்றாகவே கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்க்கில்லை. வியாபார ஸ்தலங்கள் அமைக்கப்பட்டதனால், இன்று நான்கு மையவாடிகள் (1.அந் நாசர் வித்தியாலயத்திற்க்கு முன்பாக; 2.கலாச்சார மண்டபத்திற்க்கு அருகாமையில்; 3.நூறானியா பள்ளிவாயலுக்கு அருகாமையில்; 4.மெத்தைப்பள்ளிவாயலுக்கு சொந்தமான குட்வின் சந்தி மையவாடி) முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டன. 

காத்தான்குடியில் வீடுகளையும், பொதுவான தேவைகளுக்கான கட்டிடங்களையும், அரசாங்க அலுவலகங்களையும் அமைப்பதற்கென்று நிலங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், பள்ளிவாயல்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் சொந்தமான நிலங்களை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய பாரிய பொறுப்பை மறந்துவிட்டு, இவ்வாறு மையவாடிகளை துஷ்பிரயோகம் செய்வது இஸ்லாத்திற்க்கும், எதிர்கால சமூகத்தினருக்கும் செய்யும் அநியாயமாகும்.

கடந்த காலங்களில் காத்தான்குடியின் தெற்குப்புறமாக அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை பாதுகாக்கத் தவறியதால், இன்று அவற்றை நாம் இழக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் முப்பது வருடங்களுக்கு முன்பாவது, காத்தான்குடியினதும், மேற்க்குறிப்பிட்ட காணிகளினதும் எல்லைகளை வரையரை செய்து பாதுகாத்திருந்தால், இன்று நாம் ஏன் மாற்று சமூகத்தினரிடம், குப்பைகளை கொட்டுவதற்க்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுமாறு கையேந்தி நிற்க வேண்டும்?.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன நிர்வாகிகளே! நீங்கள் எவ்வாறு மையவாடியில் உங்களின் காரியாலத்தை அமைப்பீர்கள்?. உங்களின் காரியாலயத்தின் கீழ் எமது பெற்றோர்களும், சகோதர, சகோதரிகளும் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாத்திற்க்கு மாற்றமான முறையில் அதன் காரியாலயத்தை அமைத்து இயங்கும் ஒரு நிறுவனத்திற்க்கு எவ்வாறு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்? இவ்வாறான ஒரு நிறுவனம் எங்களுக்குத் தேவைதானா?.

மரணித்த எங்களது பெற்றோரினதும், சகோதர சகோதரிகளினதும் மண்ணறைகளின் மேல் வியாபார ஸ்தலங்களை அமைத்து, அதன் மூலம் பெறப்படுகின்ற வருமானத்தில் பள்ளிவாயல்கள் நடாத்தத்தான் வேண்டுமா?, இவ்வாறு பெறப்படுகின்ற வருமானம் ஹலாலானதா?, இந்த ஜும்ஆ பள்ளிவாயல்களில் தொழமுடியுமா?, இந்தப் பள்ளிகளில் தொழுவதைவிட வீதிகளில் தொழுவது சிறந்ததே.

காத்தான்குடியில் உள்ள அனைத்து மையவாடிகளும் யாருக்குச் சொந்தமானவை என்ற விடயம் இன்னும் தெளிவில்லாமலேயே இருந்து கொண்டிருக்கின்றது. இந்த மையவாடிகள் ஜும்ஆ பள்ளிவாயல்களுக்குரியதா? அல்லது காத்தான்குடி மக்களின் பொதுச் சொத்தா? அல்லது அரசாங்கத்திற்க்குரியதா?. மையவாடிகள் அனைத்தும் ஜும்ஆ பள்ளிவாயல்களுக்குச் சொந்தமானவை என்றால், அதன் ஆவணங்களையும், அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களையும், ஜும்ஆ பள்ளிவாயல்கள் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

அத்தோடு மையவாடிகளில் வியாபார ஸ்தாபனங்கள் அமைப்பதற்க்கும், அரசாங்க அலுவலகங்களை அமைப்பதற்க்கும், சமூக சேவை நிறுவனத்தின் காரியாலயத்தை அமைப்பதற்க்கும், இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற உலமாக்களின் பத்வாக்களையும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அங்கீகாரத்தையும் ஜும்ஆ பள்ளிவாயல்கள் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். 

இவ்வாறு ஜும்ஆ பள்ளிவாயல்கள் மையவாடிகளின் ஆவணங்களையும், அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களையும், பத்வாக்களையும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அங்கீகாரத்தையும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த முடியாவிட்டால், இன்றே அனைத்து கட்டடங்களும் உடைக்கப்பட வேண்டும். இஸ்லாமிய சட்டத்திற்க்கும், இலங்கையின் சட்டத்திற்க்கும் மாற்றமான முறையில், உரிமை இல்லாத இடத்தில் ஜும்ஆ பள்ளிவாயல்களின் நிர்வாகங்கள் எவ்வாறு கட்டிடங்கள் அமைக்க முடியும்?, இவர்களுக்கு மையவாடிகளில் கட்டிடங்கள் அமைப்பதற்க்கு, அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! இந்த அநியாயத்தை இன்னும் எத்தனை காலத்திற்க்குத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கப்போகின்றோம்?, இதை தடுத்து நிறுத்தாவிட்டால், குப்பைகளை கொட்டுவதற்க்காக இன்று மாற்று சமூகத்தினரிடம் கையேந்தி நிற்க்கும் நாம், எங்களின் ஜனாஸாக்களில் கல்லைக் கட்டி கடலில் தூக்கி வீசப்படும் காலம் மிகத் தொலைவில்  இல்லை என்பதை, நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

1 comment:

  1. இது யார் எழுதிய கட்டுரை? ஒரு ஊர் விஷயத்தை தேவை இல்லாத அவசியம் இன்றி உலகரிய செய்வதன் நோக்கம் என்ன??? கட்டிடங்கள் கட்டபட்டைடத்தில் மையதுகள் அடக்கபட்டதாக எந்த மடயன் சொன்னது??? அவ்வாறு மையதுக்கள் அடக்கபட்டதட்கான ஆதாரம் என்ன??? உலகில் எங்காவது நகரத்தின் மையபகுதி நடுபகுதி அந்நகரத்தின் மயானமாக மக்பராவாக அதுவும் அந்த நகரின் மொத்த நிலபரப்பில் பத்தில் ஒருபகுதி மக்பரா என்ற போர்வையில் வெறுமுனே அடைக்கபட்டு பல் நூற்றாண்டுகளாக வீன் அடிக்கபடும் கொடுமை எங்காவது நடக்குமா?? மையவாடிக்கிஎன்று ஒதுக்கபட்ட நிலப்ரப்பின் 100 இல் ஒரு பகுதியில் கூட இன்னும் மையதுக்கள் அடக்கி முடிக்கபடவில்லை என்ற உண்மை எத்தனை பேருக்கு தெறியும்???

    ReplyDelete

Powered by Blogger.