Header Ads



யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல்: அவசியமும், நடைமுறைகளும்..!


(அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி)

இன்ஷா அல்லாஹ் “யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 2013” நிகழ்விற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதுகுறித்து ஒரு சரியான பார்வை சமூக ஆர்வலர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்படுத்தப்படுவது கட்டாயத் தேவையாகும். இதனைக் கருத்திற்கொண்டு இவ்வாக்கம் இடம்பெறுகின்றது.

2013 பலரும் குறிப்பிடுவதைப் போன்று சவால்கள் மிகுந்த ஆண்டாகவே அமைய இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம், இருப்பு ரீதியாகவும், சமூகரீதியாகவும் ஒரு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறான சவால்களை எதிர்கொள்ளத்தக்க பலமான சமூகமாக யாழ் முஸ்லிம் சமூகம் இல்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் சிவில் சமூகச் செயற்பாடுகளில் காணப்பட்ட பாரிய குறைபாடுகள் இன்று அந்த சமூகத்தின் சாபக்கேடுகளாக மாறியுள்ளன. படித்த சமூகத்தவர்கள், வசதி படைத்த சமூகத்தவர்கள் யாழ் முஸ்லிம் சமூகத்தில் தலைதூக்கியிருந்த அறிவீனர்களினால் சமூகரீதியான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள் அதனால் அவர்கள் சமூகத்தை விட்டும் ஒதுங்கிக் கொண்டார்கள், இன்னுமொரு சாரார் சமூகம் குறித்தும் மார்க்கம் குறித்தும் சரியான பார்வைகள் இல்லாமல் சமூகத்தை விட்டும் ஒதுங்கிக் கொண்டார்கள். இது குறித்து சிந்திக்கின்றபோது ஒரு கதை ஞாபகத்துக்கு வருகின்றது “ ஒரு கப்பலில் பயணித்த இரு சாரார் குறித்த கதையே அது. கீழ் தட்டில் பயணித்தவர்களுக்கு நீர்ப்பற்றாக்குறை ஏற்படவே மேல்தளத்தில் பயணித்தவர்களை அணுகி தண்ணீர் தந்துதவும்படி கோரினார்கள், மேள்தளத்தில் இருந்தோர் மறுத்துவிடவே கீழ்தளத்தில் இருந்தவர்கள் கப்பலில் துவாரம் இட்டு தண்ணீர் பெற முயன்றார்கள் மேல்தளத்தில் இருந்தவர்களோ இது குறித்து கண்டுகொள்ளவேயில்லை. இறுதியில் இரு சாராரும் நீரில் மூழ்கி அழிந்துபோனார்கள்” என்ற கதையே அதுவாகும். சுயநலத்துடன் அடுத்தவர்கள் எதுவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும்  என்றிருந்தவர்கள் தாமும் தமது பொடுபோக்குத் தனத்தால் அழிந்துபோனார்கள்.

யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலையும் அதுவேதான். 1990களில் புலிகளின் பலவந்த வெளியேற்றம் நிகழ்ந்தபோது நாம் செய்வதறியாது அதிர்ச்சியில் இருந்தோம். நாம் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டோம். எமது சமூக செயற்பாட்டாளர்கள் சீராகச் சிந்திக்கவும் மக்களை வழிநடாத்தவும் தவறிவிட்டார்கள், மீள்குடியேற்றம் எம்மை நோக்கி சடுதியாக வந்து நின்றது. 2009 முதல் இன்றுவரை மீள்குடியேற்றத்திற்காக நாம் பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்கின்றோம். ஆனால் எதுவும் கைகூடியாத இல்லை. எமது சமூக செயற்பாடுகள் அன்று எதிர்கொண்டதைப் போலவே அறிவீனர்களின் அடாவடித்தனங்களையும், அறிவுள்ளவர்கள், வசதிபடைத்தோரின் பொடுபோக்கு தனங்களையும் நிறையவே எதிர்நோக்கியுள்ளது.

விளைவு 2013களில் மிகமோசமான மற்றுமொரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ளும் சமூகமாக இன்று நாம் மாறியுள்ளோம். எமது மீள்குடியேற்றம் திட்டமிட்ட அமைப்பில் தட்டிக்கழிக்கப்படுகின்றது. எமது சமூகத்தின் சுயநலமிகளும், அறிவீனர்களும் தம்மையறியாமலே எமது சமூகத்தினுள் பிளவுகளை திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். மீள்குடியேறும் மக்களும் விரக்தியுடன் தமது மீள்குடியேற்றத் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் மிக வேகமாக விற்கப்படுகின்றன. மீள்குடியேற்றம் குறித்து இப்போது எவருமே சிந்திக்க முடியாத அளவிற்கு எமது சமூகத்தின் நிலை மிகவும் தாழ்ந்து செல்கின்றது.

இது இவ்வாறு இருக்க எமது சமூகத்தின் ஒரு சில புல்லுறுவிகள்  புதைகுழிகளைத் தோண்டியெடுப்பதிலும், எமது சமூகத்தின் தனிமனிதர்களை வசைபாடுவதிலும் நேரத்தையும் வளங்களையும் விரயம் செய்கின்றார்கள். மறுமை நாள் என்ற ஒன்றை மறந்த அவர்களது செயல்கள் மறுமையில் அவர்கள் சுவன் செல்லத்தடையாக இருக்கட்டும்.

இவ்வாறான இக்கட்டான நிலைகளில்தான் நாம் சுதாரித்துக் கொள்ளவேண்டும். எமது பள்ளிவாயல்கள் கிறிஸ்த்தவ தேவாலயங்களாக மாற்றம் காணும் அபாயம் ஏற்பட முன்னர். எமது முஸ்லிம் பெயர்களை சுமந்த வீதிகளின் பெயர்கள் மாற்றுப் பெயர்கள் சூட்டப்படுவதற்கு முன்னர். எமது காணி நிலங்கள் முற்றாக விற்றுத் தீர்க்கப்படுவதற்கு முன்னர், நாம் சிந்திக்கவும் துரிதமாக செயலாற்றவும் கடமைப்பட்டுள்ளோம்.இன்னமும் காலம் கெட்டுவிடவில்லை, இன்னமும் காலம் தாமதமாகிவிடவில்லை. எமது சமூகத்தின் இருப்பை, எமது சமூகத்தின் அடையாளத்தை, எமது சமூகத்தின் நிலத்தை, எமது சமூகத்தின் சுயத்தை பாதுகாத்து. எமது மக்களுக்கும் எமது சமூகத்துக்கும் எமது மண்ணுக்கும் இடையிலான தொடர்பை உறுதி செய்வதற்கான தேவையின் வெளிப்பாடாகவே “யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 2013” ஏற்பாடு செய்யப்படுகின்றது.

“யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 2013” என்னும் நிகழ்வின் மூலம் நாம் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் அனைத்து மக்களையும் யாழ் மண்ணை நோக்கி மீண்டும் அழைக்கின்றோம். அவர்கள் வருவார்கள், தமது காணி நிலங்களைப் பார்வையிடுவார்கள், எமது ஊரின் அடையாளத்தை, கலை கலாசார நிகழ்வுகளைக் கண்டுகளிப்புறுவார்கள். எமது மண்ணிலே நிரந்தரமாகத் தங்கிவிடும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் எமது மண்ணிலேயே தங்கிவிடுவார்கள். இதுதான் ஒன்றுகூடலின் பிரதான நோக்கமாக இருக்கின்றது.

இதனை மேலும் மெருகூட்டுவதற்காக யாழ் முஸ்லிம் பிரதேசத்தின் எல்லைப்புறங்கள் வர்ண விளக்குகளால் அடையாளம் செய்யப்படும், இஸ்லாமிய நிகழ்ச்சிகள் வானொலிகளில் ஒலிபரப்பப்படும். சிரார்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும், வாலிபர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், உதைபந்தாட்டப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும், இன நல்லிணக்கத்திற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறாக ஒரு முழுமையான சமூக நிகழ்வாக யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல்2013 அமையும் என்பது எம் எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும். எனவே அனைத்து யாழ் முஸ்லிம் சொந்தங்களும் இந்நிகழ்விற்கு ஒத்துழைப்புத் தருமாறும், கலந்து சிறப்பிக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். இதனை சிரமேற்கொண்டு செயலாற்றுவது யாழ் மண்ணின் அனைத்து புதல்வர்களுக்கும், புதல்விகளுக்கும் உரித்தான பொறுப்பாகும்.



No comments

Powered by Blogger.