Header Ads



பிரபாகரனின் கனவை நனவாக்கவே அமெரிக்க குழு இலங்கை வருகிறது


புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனவை நனவாக்கும் நோக்குடனேயே அமெரிக்கா தனது மூவர் அடங்கிய "திரிசூலக் குழுவை' இலங்கைக்கு அனுப்புகிறது. இதனை ஜெனிவா இராஜதந்திரச் சமருக்கு அமெரிக்கா விடுக்கும் அறை கூவலாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது கடும் போக்குடைய சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய இராஜதந்திரக் குழுவின் இலங்கைப் பயணம் குறித்து கருத்து வெளியிடும்போதே தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவருமான கலாநிதி குணதாச அமர சேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறி யவை வருமாறு:

அமெரிக்கா தற்போது நாளாந்தம் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. அனைத்துவித உள்விவகாரங்களிலும் அந்த நாடு மூக்கை நுழைக்கின்றது. உலக வல்லரசு என்ற நினைப்பில் ஆடும் அமெரிக்காவுக்கு நாம் ஒருபோதும் அடிபணியக்கூடாது.

அமெரிக்கா இல்லாவிட்டால் என்ன, இலங்கைக்குப் பக்கபலமாகத் தற்போது சீனா இருக்கின்றது. எனவே, அரசு சீனாவுடனான தனது உறவுகளைப் பலப்படுத்த வேண்டும். சீனாவின் பக்கம் முழுமையாக சாய்வதை விட தற்போது வேறு வழியில்லை.

அதேவேளை, பிரபாகரனின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே அமெரிக்கா செயற்படுகின்றது. மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மாநாட்டில் இலங்கையை இறுக்குவதற்கு அது முயற்சிக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

ஜெனிவா சமருக்குத் தயாராகுமாறு அறைகூவல் விடுப்பதற்கு மூவரடங்கிய இராஜதந்திரிகளை இலங்கைக்கு அனுப்புகிறது வெள்ளைமாளிகை நிர்வாகம் என்றார். 

No comments

Powered by Blogger.