Header Ads



O/L பரீட்சை நாளை ஆரம்பம்

(எஸ்.எல்.மன்சூர்)

க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை நாளை 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இவ்வருடம் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 260 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 48 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும். இவற்றுக்கு மேலதிகமாக 537 இணைப்பு நிலையங்கள் 33 பிராந்திய சேகரிப்பு நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறினார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக் கிழமை வரை பரீட்சைகள் தொடரவுள்ளன. இம்முறை 3 இலட்சத்து 87 ஆயிரத்து 593 பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 667 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மேலதிகமாக கொழும்பு சிறைச்சாலையிலும் அம்பேபுஸ்ஸ சிறுவர் நன்னடத்தை நிலையத்திலும் தலா ஒவ்வொரு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை, மாத்தறை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.


பரீட்சை எழுதுவதற்கு கட்டாயமாக்கப்பட்டிருந்த ஆள்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டையைப் பல பாடசாலைகளின் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்பதுதெரியவந்துள்ளது. இதற்கு ஒரு காரணமாக அமைந்தவர்கள் பாடசாலைகளின் அதிபர்களேயாவர். உரிய காலப்பகுதிக்குள் உரியவாறு விண்ணப்பங்களை ஆள்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பாது விட்டமை பேன்ற காரணங்களால் இவ்வட்டை கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவருகின்றது.

அக்கரைப்பற்று கல்வி அலுவலகத்திற்குட்பட்ட சில பாடசாலைகளிலும் இவ்வடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதில் அப்பாடசாலைகளின் அதிபர்கள் அசமந்தமாக நடந்துள்ளனர். மாணவர்களிடம் அடையாள அட்டைக்கான பணத்தைப் பெற்றும்கூட உரிய காலத்தினுள் பெற்றுக் கொள்ளாமை பெற்றோர்களையும் விசனத்திற்குட்படுத்தியுள்ளன.

தற்போது தபால் அடையாள அட்டைகளைக் கொண்டு பரீட்சை எழுதவேண்டியும், அதுவும் முடியாவிட்டால் போட்டோக்களை அதிபர் ஊடாக அத்தாட்சிப்படுத்தப்பட்டு பரீட்சை எழுத முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை எழுதும் மாணவர்களையும், பெற்றோர்களையும் உளரீதியாக பாதிக்கப்படவைக்கின்ற ஒரு நிகழ்வாகவே இதனைப்பார்க்க முடிகின்றது. இனிவரும் காலங்களில் அதிபர்கள், பொறுப்பாக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உரியவேளையில் உரிய முறையில் விண்ணப்பித்து அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்குமாறு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.