உலக எழுத்தறிவு தினம்
கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.
என்ன பயன்:
எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இருதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.
ஆப்ரிகாவில் குறைவு:
வயது வந்தோரில் 10 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். உலகில் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் 2 பேர் பெண்கள். எழுத்தறிவற்றவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஆப்ரிகா கண்டத்தில், எழுத்தறிவு சதவீதம் 60க்கும் குறைவு. வளரும் நாடுகளில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில் 15 சதவீதம் பேர் பள்ளி செல்லவில்லை என யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


Post a Comment