Header Ads



செங்கடலில் எகிப்து கப்பல் தீப்பற்றியது - 1,229 பேர் உயிர் தப்பினர்


செங்கடலில் சென்று கொண்டிருந்த, எகிப்து நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் கப்பலில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் பயணித்த ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். மற்ற 1,229 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், ஜோர்டான் வழியாக எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்தது. கப்பலில் இருந்த, 1,230 பயணிகளில், பெரும்பாலோர் எகிப்து நாட்டினர். கப்பல் ஜோர்டான் நாட்டின் அகுபா துறைமுகம் தாண்டி, எகிப்துக்கு அருகே வந்தபோது, திடீரென தீப்பற்றி, எரிய துவங்கியது. அதிர்ச்சியடைந்த கப்பல் அதிகாரிகள், எகிப்து கடற்படைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கடற்படையினர், கடும் போராட்டத்திற்கு பின், தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியானார். மற்ற 1,229 பேர் உயிர் தப்பினர்.

உயிர் தப்பியவர்களில் பலர் சிறு சிறு படகுகள் மூலம் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டன. மேலும் பல பயணிகள், கடலில் குதித்து, நீந்தியபடி கரை சேர்ந்தனர். பத்திரமாக மீட்கப்பட்டவர்கள், மற்றொரு பயணிகள் கப்பலில், அருகில் உள்ள நுவெய்பா துறைமுகம் அனுப்பி வைக்கப்பட்டதாக, எகிப்து போக்குவரத்து அமைச்சர் அலி ஜெய்ன் அல் அபிடின் தெரிவித்தார். எனினும், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

No comments

Powered by Blogger.