பெரியமுல்லையில் போதைப் பொருட்கள், வலிநிவாரண வில்லைகளை விற்பனை செய்யும் 14 பேர் கைது
- Ismathul Rahuman -
ஐஸ் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியதில் தனது கழுத்தை வெட்டிக்கொண்டு உயிர் நீத்த சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் பதட்ட நிலமை ஏற்பட்டது.
இதனையடுத்து செயல்பட்ட நீர்கொழும்பு பொலிஸார் இப்பிரதேசத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். போதைப் பொருட்கள் மற்றும் வலிநிவாரன வில்லைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் 14 பேர்களை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
ஐஸ் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிய நீர்கொழும்பு,பெரியமுல்லையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தாம் வாடகைக்கு வசிக்கும் போரத்தொட்ட, தக்கிய்யா வீதியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து தனது கழுத்தை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிக்கொண்டு மரணமடைந்தார்.
இம்மரணத்தையடுத்து நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேச இளைஞர்கள் மத்தியில் பதட்ட நிலமை ஏற்பட்டு போதைப்பொருளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகினர்.
இதனை உணர்ந்த பொலிஸார் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிக்கேராவின் ஆலோசனைக்கு இனங்க நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகம தலைமையில் இப் பிரதேசத்தில் தீடீர் சோதனைகளை மேற்கொண்டனர். ஹெரோயின் மற்றும் போதைப்பொருட்களை விற்பனைசெய்பவர்கள், சட்டவிரோதமாக வலிநிவாரன வில்லைகள் விற்பவர்கள் என 14 பேர்களை கைதுசெய்தனர். இவர்களிடமிருந்து போதைப்பொருட்களும், பாரியளவான வலிநிவாரன வில்லைகளும் கைபற்றப்பட்டன.
சந்தேகநபர்கள் 14 பேர்களையும் நீர்கொழும்பு பதில் நீதவான் பிரிமால் அமரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது ஜனவரி 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Post a Comment