Header Ads



துருக்கி இலங்கைக்கு தாராளமாக நல்கிய ஆதரவுகள் - விளக்கிக்கூறிய பீரிஸ்


ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் பக்க நிகழ்வாக, நியூயோர்க்கில் உள்ள துருக்கிய நிரந்தரத் தூதரகத்தின் சான்சரிக் கட்டிடத்திலுள்ள துருக்கி இல்லத்தில் வைத்து  இருதரப்பு சந்திப்புக்காக துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் மெவ்லட் சவுஷோலு இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வரவேற்றார்.

2016ஆம் ஆண்டு தான் இலங்கை மேற்கொண்ட இரண்டு நாள் விஜயத்தை பயணத்தை வெளிநாட்டு அமைச்சர் சவுஷோலு மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். விஜயத்தின் போது அவருக்கு வழங்கப்பட்ட ஏற்பாடுகளை அமைச்சர்  பாராட்டினார். துருக்கிக்கான தனது பல விஜயங்களை அன்போடு நினைவு கூர்ந்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், தனக்குக் கிடைத்த உயரிய அனுபவங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார். தனது நாட்டில் இலங்கையின் கௌரவ துணைத்தூதுவர் ஒருவர் விரைவில் பதவயேற்கவிருப்பது குறித்து துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் மகிழ்ச்சி வெளியிட்டார்.

தமது பரஸ்பர விஜயங்களை மதிப்பீடு செய்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் சிறந்த உறவுகளை, குறிப்பாக பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஏனைய மட்டங்களிலான விஜயங்கள் மற்றும் தொடர்புகளின் மூலம் பிணைப்புக்களை மேலும் மேம்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த தருணமாகும் என இரு வெளிநாட்டு அமைச்சர்களும் குறிப்பிட்டனர். இரு நாடுகளும் புவியியல் ரீதியாக வெகு தொலைவில் இருந்தாலும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மிக நெருக்கமாக இருந்ததாக வெளிநாட்டு அமைச்சர் சவுஷோலு குறிப்பிட்டார். வென்டிலேட்டர்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்கி கோவிட்-19 தொற்றுநோயின் போது துருக்கி இலங்கைக்கு தாராளமாக நல்கிய ஆதரவுகள் குறித்து குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், சுனாமியின் பின்னர் வீட்டுவசதிகளை வழங்கி நல்கிய ஆதரவுகளைப் பாராட்டினார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தகம் 100 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டில் 200 மில்லியன்  அமெரிக்க டொலர்களை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

துருக்கிக்கு ஏற்றுமதி செய்யும் தேயிலையை 80% இலிருந்து பல்வகைப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், கட்டுமானம் மற்றும் மருந்து போன்ற அபிவிருத்திப் பகுதிகளில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான மிகப்பெரிய ஊக்குவிப்பு இரு நாடுகளுக்கும் இடையே இருப்பதாகக் குறிப்பிட்டார். துருக்கி நிபுணத்துவம் பெற்றுள்ள தொழில்கள் மற்றும் உள்ளூர் சந்தை மற்றும் அதற்கு அப்பால் உள்ள மருந்துகளைத் தயாரிப்பதற்காக குறிப்பிட்ட பொருளாதார சுதந்திர வலயங்களைக் கொண்டு இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை விரும்புகின்றது. துருக்கிய கட்டுமானத் துறை உலகின் இரண்டாவது பெரியதாகும் என்றும், தாம் தமது பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பல திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் துருக்கிய வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுத் திட்டங்கள், முதலீடுகள் மற்றும் முன்முயற்சிகளுக்கு வாய்ப்பு;களை வழங்க உதவும் விலக்களித்தல், இரட்டை வரிவிதிப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இரு அமைச்சர்களும் ஆர்வம் தெரிவித்தனர்.  முக்கியமான உலகளாவிய சர்வதேச மையமாக தமது வகிபாகத்தை அதிகரிக்கும் துருக்கியின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் போன்ற உட்கட்டமைப்புக்கான வெற்றிகரமான தனியார் திட்டங்களுக்கான அனுபவத்தை துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

அங்காரா மற்றும் கொழும்புக்கு இடையேயான விமான இணைப்பை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும்  பிராந்தியத்திற்கான குறியீட்டுப் பங்கு விமானங்கள், புதிய நிலைகளுக்கான இணைப்புக்கள் மற்றும் உறவுகளை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உட்பட, மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். இறுதி செய்யப்பட்ட மற்றும் இறுதிக் கட்டங்களில் உள்ள ஒப்பந்தங்களை விரைவுபடுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் போது இலங்கையில் இரண்டு துருக்கி நாட்டவர்கள் மரணித்தமைக்காக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறத்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கினார். தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் தொடர்புகளிலும் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இரு அமைச்சர்களும் வெளிப்படுத்தியதுடன், மனித உரிமைகள் அரசியல்மயமாக்கப்படுவதையும், சில தரப்பினர்கள் மனித உரிமைகளை கருவிகளாகத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதையும் எதிர்த்த அதே வேளை, ஐக்கிய நாடுகள்  சபை மற்றும் ஏனைய அரங்குகளில் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாக உறுதியளித்தனர்.

தான் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும், எனினும் கோவிட் தொற்றுநோயின் காரணமாக விஜயத்தை ஒத்திவைக்க நேர்ந்ததாகவும் வெளிநாட்டு அமைச்சர் சவுஷோலு குறிப்பிட்டார். எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் துருக்கிய வெளிநாட்டு அமைச்சருக்கு  அழைப்பு விடுத்தார்.

நட்புறவு மற்றும் நெருக்கமான உறவை விரிவாக்குவதற்கு இரு அமைச்சர்களும் எதிர்பார்த்ததுடன், கோவிட்  தொற்றுநோய்க்குப் பின்னர் தொடர்புகளை மேலும் ஆரம்பிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

வெளிநாட்டு அமைச்சு - கொழும்பு


No comments

Powered by Blogger.