Header Ads



குர்பானை நிறுத்த திட்டம் -அமைச்சின் செயலாளருக்கு அதிகாரமில்லை - இம்ரான் எம்.பி


ஹஜ் பெருநாள் குர்பான் நடவடிக்கைகளை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள  நாடகமே மாடறுப்பை தடை செய்யுமாறு அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த அரசுக்கு தேசிய மற்றும்  சர்வதேச ரீதியில் பல பக்கம் அழுத்தங்கள் காணப்படுகின்றன. அவர்களின் வெளிநாட்டு கொள்கையால் கடனை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

மற்றொரு பக்கம் இனவாதத்தை கொண்டு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த இவர்கள் கூறிய பொய்களை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். இதனால் இவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்த கடும்போக்கு அமைப்புகளே அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். 

இவ்வாறு பல பக்க அழுத்தங்களை எதிர்கொள்ளும் அரசு இந்த அழுத்தங்களில் இருந்து விடுபட தமக்கு எதிராக உள்ள கடும்போக்கு அமைப்புக்களை அமைதிப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சியே மாடறுப்பு தடை தொடர்பாக அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம்.

இதன்மூலம் அடுத்தவார ஹஜ்ஜூப்பெருநாள் நாட்களில் முஸ்லிம்கள் மேற்கொள்ளும் குர்பான் நடவடிக்கைகளை குழப்பவே அரசு முயற்சிக்கிறது.

இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட பின் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். அதன்பின்னரே இச்சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு குறித்த அமைச்சுக்கு உள்ளது.

ஆனால் இவர்கள் வர்த்தமானியில் வெளியிட்டவைகளையே இன்னமும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.ஆனால்   வர்தமானியில் வெளியிடப்படாத ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாத விடயத்தை நடைமுறைப்படுத்த அமைச்சின் செயலாளருக்கு எந்த அதிகாரமுமில்லை.ஆகவே இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய நாம் நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பேச எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.