ரிஷாட் கைது செய்யப்பட்டது ஏன்..? இன்று நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் தெரிவித்த விடயம் - ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
குறித்த தற்கொலை குண்டுதாரியால் வெல்லம்பிட்டியில் செப்பு தொழிற்சாலை 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த காலப்பகுதியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக ரிஷாட் பதியுதீன் செயற்பட்டதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு சொந்தமான இரும்பு மற்றும் உலோகப்பொருட்களில் 86 வீதமானவற்றை குறித்த செப்பு தொழிற்சாலைக்கு கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சண்முகம்பிள்ளை பாலசுப்ரமணியம் என்பவர் அப்போதைய ஜனாதிபதி செயலாளரின் ஆலோசனையை பெறாது பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.
குறித்த தற்கொலை குண்டுதாரியின் செப்பு தொழிற்சாலைக்கு, விசேட அனுசரணை வழங்குவதற்கு அப்போதைய கைத்தொழில் அமைச்சராக செயற்பட்ட ரிஷாட் பதியுதீனும் அவரின் இணைப்புச் செயலாளரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதை நம்ப முடியாது எனவும் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியமை, ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, சண்முகம்பிள்ளை பாலசுப்ரமணியம் என்பவர் வௌிநாட்டிற்கு சென்றுவிட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே இந்த விடயங்கள் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் இன்று உத்தரவிட்டனர்.
Post a Comment