கொரோனா ஜனாஸாக்களை புத்தளத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் தேவை, எனது சொந்த காணியை வழங்கவும் தயார் - அலிசப்ரி ரஹீம்
கொவிட் 19 தற்போதைய நிலைமை மற்றும் புத்தளம் மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றல் சம்பந்தமாக ஆராயும் விசேட கூட்டமொன்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் (15) நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் அரச உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு புத்தளம் மாவட்டத்தில் கொவிட் 19 தடுப்பு சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்தனர்.
அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்,கொவிட் 19 தொற்றினால் மரணித்த முஸ்லிம்களுடைய 500 க்கும் மேற்பட்ட ஜனாசாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அங்கு ஜனாஸாவை எடுத்துச் செல்கின்ற வழியில் உறவினர்களுக்கு பாதுகாப்பு கெடு பிடிகளும் ஏற்படுகின்றன. இவைகளை நிவர்த்தி செய்வதற்காகவே புத்தளம் மாவட்டத்தில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்கின்றோம். பயணத்தடை அமுலிலுள்ள நிலையில், சில பிரதேசங்களில் நடைமுறைகளை வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.
இதனால் சில சிரமங்களையும் ஜனாஸாக்களை எடுத்துச் செல்லும்போது எதிர்கொள்ள நேரிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.இக்கலந்துரையாடலில் வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே, இராஜாங்க அமைச்சர்களான பிரியங்கர ஜயரத்ன, அசோக பிரியந்த, சனத் நிஷாந்த பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(புத்தளம் தினகரன் நிருபர்)
Post a Comment