Header Ads



இலங்கையை முதலீட்டுக்கான சிறந்த இடமாகக் கொள்ளுங்கள் - உறுப்பு நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்


இலங்கையை முதலீட்டுக்கான சிறந்த இடமாகக் கொள்ளுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போவோ மன்ற உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார். 

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஏற்றுமதியை இலக்காகக்கொண்ட முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக முதலீடுகளை மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு ஜனாதிபதி அரச தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். 

சீனாவின் ஹைனேன்ஹி, போவோ நகரத்தில் நடைபெறுகின்ற போவோ (BOAO) மாநாட்டில் இன்று (20) முற்பகல் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

"மாறிவரும் உலகம்: உலகளாவிய ஆளுகையை வலுப்படுத்தவும் பட்டை மற்றும் பாதை கூட்டுறவை மேம்படுத்தவும் கைகோர்ப்போம்." என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும். ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பித்த நான்கு நாள் மாநாட்டின் மூன்றாம் நாள் இன்றாகும்.

29 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் போவோ மன்றத்தின் தலைமையகம் சீனாவாகும். ஆசியாவின் உலக அமைதி, மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கு பங்களிப்பதற்கு மன்றம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. 

நியுசிலாந்து, மொங்கோலியா, புருனை, சிங்கப்பூர், வியட்னாம், பங்களாதேஷ், கம்போடியா உள்ளிட்ட 15 நாடுகளின் அரச தலைவர்கள் இன்று (20) வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக மன்றத்தில் கலந்துகொண்டனர்.

சாதகமான வரி அமைப்பு மற்றும் ஏனைய சலுகைகள் உள்ளிட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான கொள்கையை நாட்டில் நாம் உருவாக்கி வருகின்றோம். குறித்த இலக்கை அடைந்துகொள்வதற்கு சர்வதேச பங்காளர்களின் ஆதரவை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

அதன் மூலம் எதிர்வரும் காலங்களில் இந்நாட்டு பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்களவில் உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

சீன மக்கள் குடியரசு “போவோ” மன்றத்தின் மூலம் செயற்படுத்தி வருகின்ற நடவடிக்கைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், பல நூற்றாண்டுகால பலமான வரலாற்றின் ஊடாக இலங்கையும் சீனாவும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வலுவான மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன என்றும் நினைவுகூர்ந்தார்.

இலங்கை ஆசிய வலயத்தின் அண்டைய நாடுகளுடனும் மற்றும் ஏனைய நட்பு நாடுகளுடனும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வெளியுறவுக் கொள்கையை பேணிவருகின்றது. அது சமமான மற்றும் அணிசேரா கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்பாடுகள் எங்கள் “சுபீட்சத்தின் நோக்கு” அபிவிருத்திக்கொள்கை சட்டகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

தேசிய கொள்கைகள் மற்றும் சர்வதேச பகிரப்பட்ட கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் விதிகளுக்கிடையில் நியாயமான சமநிலையை பேணுவது அவசியம். சமநிலையை பேணுவதில் சுயாதீன அரசுகளின் இறையாண்மையை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட கூடாது என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

(ஜனாதிபதி அவர்களின் முழுமையான உரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.04.20

1 comment:

Powered by Blogger.