வாக்களிக்காமைக்கான காரணத்தை கூறும் மைத்திரி
19வது அரசியலமைப்புச் சட்டத்தில் குறைப்பாடுகள் இருந்தாலும் தற்போது அதற்கு இணங்கவில்லை என்றாலும், அந்த திருத்தச் சட்டம் தனது தலைமையிலான அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட சட்டம் என்பதால், அதனை இரத்துச் செய்யும் திருத்தச் சட்டத்திற்கு தன்னால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பை நடத்தும் முன்னர் அவர் இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் சபாநாயகரை தவிர்த்தால், 224 பேர் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி என்பவற்றுக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் தற்போதைய நாடாளுமன்ற்தில் 222 பேர் மாத்திரமே அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களில் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக 65 வாக்குகள் கிடைத்தன. இவர்களில் மைத்திரிபால சிறிசேன மாத்திரமே வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment