கருணாவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுங்கள் - ஓமல்பே சோபித்த தேரர்
(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஜனாதிபதி, பிரதமர் தலையிட்டு கருணா அம்மானை கைதுசெய்யவேண்டும். அரசாங்கத்தின் பாதுகாப்பு இருக்கின்ற தைரியத்திலே ராணுவத்தினரை தான் கொலை செய்ததாக பகிரங்கமாக அவர் தெரிவிக்கின்றார். அத்துடன் சகோதர ராணுவ வீரர்களை கொலை செய்த கருணா அம்மானுக்கு எதிராக ராணுவத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக நாங்கள் ஆதரவளிப்போம் என தென் மாகாண தேரர்களின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்
எம்பிலிபிட்டிய பிரமதேசத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஆனையிரவு ராணுவ முகாமை தாக்கி பிடிக்கும்போது தனது கட்டளையின் அடிப்படையில் இரண்டு மூவாயிரம் ராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா அம்மான் பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றார். திகாமடுள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றிலே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.இவ்வாறான சட்டவிராேத செயலை தான் செய்ததாக பகிரங்கமாக தெரிவித்து இரண்டு நாட்கள் கடந்தும் அவருக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது.
நாட்டின் ராணுவம் என்பது சட்டபூர்வமான படையணியாகும். நாட்டின் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்கள். அவ்வாறான ஒருவரை சட்டவிராேதமாக கொலை செய்தாலும் அது பாரிய குற்றமாகும். இந்த சட்டவிராேத தானே செய்ததாக தற்போது அச்சமின்றி கருணா அம்மான் தெரிவிப்பதாக இருந்தால் அதில் பல கேள்விகள் இருக்கின்றன. அவர் எவ்வாறு அச்சமின்றி இதனை பகிரங்கமாக தெரிவிக்கமுடியும்?. கருணா அம்மான் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து, பின்னர் ராஜதந்திர நடவடிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு, அரச பொறிமுறைக்குள் இணைந்துகொண்டார். பின்னர் கட்சி ஒன்றின் உப தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் செயற்பட்டார்.
இவ்வாறு இருந்து தற்போது தேர்தலில் போட்டியிடும் இவருக்கு கட்சிகளின் தலைவர்கள் அரச அதிகாரிகளிம் ஆசிர்வாதம் இருக்கின்றது. அவர் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அவரை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையிலே அவர் தற்போது இவ்வாறான பயங்கரமான கூற்றை அச்சமின்றி தெரிவித்திருக்கின்றார். தனது நாவினாலே இந்த குற்றத்தை தெரிவிக்கும் கருணா அம்மானுக்கு எதிராக சட்டமா அதிபர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் என கேட்கின்றேன். ராணுவ வீரர்களை கொலை செய்ததாக தனது நாவினாலே தெரிவிக்கும்போது அதற்கு வேறு சாட்சியங்கள் எதற்கு?.
அதனால் நீதித்துறையின் கெளரவத்தை பாதுகாத்துக்கொள்ள கருணா அம்மானை உடனடியாக கைதுசெய்யவேண்டும். அதற்கு ஜனாதிபதி, பிரதமர் தலையிடவேண்டும். அதிகாரிகள், நீதித்துறை தனது கடமையை சரியானமுறையில் செயற்பட்டு கருணா அம்மானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், முப்படையினர் தங்களின் தற்காப்புக்காக நடவடிக்கை எடுக்கநேரிடும். கருணாவால் கொலை செய்யப்பட்ட சகோதர ராணுவ வீரர்களுக்காக, ராணுவத்தினர் தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். அதற்காக மக்களுடன் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்றார்.
Post a Comment